அரசு மருத்துவர்கள் சங்கங்களை அழைத்துப் பேசி கோரிக்கைகளை நிறைவேற்றுக: இந்திய கம்யூனிஸ்ட் வலியுறுத்தல். 

அரசு மருத்துவர்கள் சங்கங்களை அழைத்துப் பேசி அவர்களது கோரிக்கைகளை நிறைவேற்ற வேண்டும் என்று தமிழக அரசை இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்தியுள்ளது.
அரசு மருத்துவர்கள் சங்கங்களை அழைத்துப் பேசி கோரிக்கைகளை நிறைவேற்றுக: இந்திய கம்யூனிஸ்ட் வலியுறுத்தல். 

சென்னை: அரசு மருத்துவர்கள் சங்கங்களை அழைத்துப் பேசி அவர்களது கோரிக்கைகளை நிறைவேற்ற வேண்டும் என்று தமிழக அரசை இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்தியுள்ளது.

இதுதொடர்பாக இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநிலச் செயலாளர் இரா.முத்தரசன் திங்களன்று  வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:

தமிழ்நாடு அரசு டாக்டர்கள் சங்கங்களின் கூட்டமைப்பு சார்பில் நான்கு அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி பல கட்டப் போராட்டங்கள்  நடைபெற்று வருகின்றன.இன்று சென்னை இராஜிவ் காந்தி அரசு மருத்துவமனையில் தொடர் உண்ணாநிலை போராட்டத்தை தொடங்கியுள்ளனர்.

தமிழ்நாடு அரசு மருத்துவர்களுக்கு, காலம் சார்ந்த பதவி உயர்வு மற்றும் ஊதியம் வழங்கிட வேண்டும், விசிமி விதிப்படி மருத்துவர்களின் எண்ணிக்கையை மருத்துவக் கல்லூரிகளில் குறைக்கக் கூடாது, நோயாளிகள் எண்ணிக்கைக்கு ஏற்ப  மருத்துவர்கள் எண்ணிக்கையை அதிகரிக்க வேண்டும், முது நிலை மருத்துவப் படிப்பை முடித்துள்ள ,அரசு  மருத்துவர்களுக்கு பணியிட கலந்தாய்வு நடத்திட வேண்டும் மற்றும் அரசு மருத்துவர்களுக்கு முதுநிலை மற்றும் உயர்சிறப்பு மருத்துவக் கல்வியில் ஏற்கனவே இருந்த 50% இட ஒதுக்கீட்டை, தமிழக மக்களின் நலன் கருதி மீண்டும் வழங்கிட நடவடிக்கை எடுத்திட வேண்டும், உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி தொடர்ந்து போராடிவருகின்றனர்.

முது நிலை மற்றும் உயர் சிறப்பு மருத்துவக் கல்வியில்,அரசு மருத்துவர்களுக்கான 50 % இட ஒதுக்கீடு இந்திய மருத்துவக் கழகத்தால்  ரத்து செய்யப் பட்டுள்ளது.இதுஅரசு மருத்துவர்களை மட்டுமின்றி அரசு மருத்துவமனைகளையும் பாதிக்கும். அரசு மருத்துவமனைகளில், முதுநிலை மற்றும் உயர் சிறப்பு மருத்துவம் பயின்ற மருத்துவர்களின் எண்ணிக்கையை குறைத்துவிடும். பிற மாநிலத்தவர் தமிழகத்தில் மருத்துவ மேற்படிப்பை படித்துவிட்டு அவர்களின் சொந்த மாநிலங்களுக்கே சென்று விடுவர். இதனால், தமிழக அரசு மருத்துவமனைகளும், தமிழக மருத்துவத் துறையும் பாதிக்கும்.

இதனால்,தமிழக அரசு மருத்துவமனைகளை நம்பியுள்ள ஏழை எளிய மக்களுக்கு, முது நிலை மற்றும் உயர் சிறப்பு மருத்துவம் பயின்ற மருத்துவர்களின் சேவை கிடைக்காமல் போய்விடும். அரசு மருத்துவக் கல்லூரிகளில் செயல்படும் பல்வேறு உயர் சிறப்பு மருத்துவப் பிரிவுகளின் சேவை பாதிக்கப்படும்.எனவே,மருத்துவ மேற்படிப்புகளில் அரசு மருத்துவர்களுக்கு 50% இட ஒதுக்கீட்டை மீண்டும் நடைமுறைப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும். பல்வேறு மாநிலங்களையும், மத்திய அரசையும் ஒப்பிடுகையில், தமிழக அரசு மருத்துவர்களுக்கு ஊதியம் மிகக் குறைவாக உள்ளது.உரிய காலத்தில்,பல கட்ட பதவி உயர்வுகளும் வழங்கப் படவில்லை.

எனவே போராடும் மருத்துவர்கள் சங்கங்களின் தலைவர்களை அழைத்துப் பேசி, அவர்களின் கோரிக்கைகளை நிறைவேற்ற வேண்டுமென, இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநில செயற்குழு, தமிழக அரசை வலியுறுத்தி கேட்டுக் கொள்கிறது.

இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com