சென்னை: கட்சிகளைவிட மக்களும், தேசமும் முக்கியம் என்று பாஜக தமிழகத் தலைவர் தமிழிசையின் கருத்துக்கு, கரூர் எம்.பி ஜோதிமணி பதிலடி கொடுத்துள்ளார்.
நாடாளுமன்றத் தேர்தலில் பாஜக தோல்வியடைந்ததன் விளைவு பற்றி பாஜக மாநிலத் தலைவர் தமிழிசை சமீபத்தில் தனது ட்விட்டர் பக்கத்தில் கீழ்கண்டவாறு கூறியிருந்தார்.
கார்த்தி. சிதம்பரம்-பியூஷ்கோயலிடம் கோரிக்கை மனு.. கலாநிதி வீராசாமி- ராஜ்நாத் சிங்கிடம் மனு.. டிஆர்பாலு ரயில்வே மேலாளரிடம் மனு! தயாநிதி தென்னக ரெயில் ஆபிசில் மனு! அமேதியில் அமைச்சர் ஸ்மிதிராணி ஒரே மாதத்தில் பலகோடி மதிப்பில் திட்டங்களை துவக்கி அசத்தல்! பாஜகவை தோற்கடித்த தமிழகம்? இழப்பு???
இவ்வாறு அவர் பதிவிட்டிருந்தார். அவரது இந்த கருத்துக்கு பல்வேறு தரப்பில் இருந்தும் கடுமையான விமர்சனங்கள் எழுந்தது.
இந்நிலையில் கட்சிகளைவிட மக்களும், தேசமும் முக்கியம் என்று பாஜக தமிழகத் தலைவர் தமிழிசையின் கருத்துக்கு, கரூர் எம்.பி ஜோதிமணி பதிலடி கொடுத்துள்ளார்.
இதுதொடர்பாக அவர் அவர் தனது ட்விட்டர் பக்கத்தில் கூறியுள்ளதாவது:
என்ன சொல்ல வருகிறீர்கள் தமிழிசை? தமிழக மக்களுக்கு மத்திய அரசிடம் இருந்து கிடைக்கவேண்டிய உரிமையும், திட்டங்களும் கிடைக்காது என்றா? அரசும், மக்கள் பிரதிநிதிகளும் அனைவருக்கும் பொதுவானவர்கள். நாங்கள் எங்கள் கடமையை செய்கிறோம். நீங்கள் துணை நில்லுங்கள் .கட்சிகளைவிட மக்களும், தேசமும் முக்கியம்.
தமிழக மக்களின் ஓயாத உழைப்பில் தமிழகம் இந்திய அரசுக்கு மற்ற மாநிலங்களை விட அதிக வரிசெலுத்துகிறது. இருந்தும் ஏற்கனவே 14 வது நிதிக்குழு ஒதுக்கீட்டில் தமிழகம் வஞ்சிக்கப்பட்டிருக்கிறது எந்த அரசும் மக்களின் வரிப்பணத்தில் இருந்தே நிதி ஒதுக்குகிறது என்பதைப் புரிந்துகொள்ளுங்கள் சகோதரி.
இவ்வாறு அவர் பதிலளித்துள்ளார்.