சென்னை: மத்திய அரசின் திட்ட விளம்பரங்களில் நரேந்திர மோடி படங்களை அகற்ற வேண்டும் என்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சி வேண்டுகோள் விடுத்துள்ளது.
இது தொடர்பாக இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் முத்தரசன் புதனன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:
மத்திய அரசின் திட்டங்கள் குறித்த விளம்பரப் பலகைகளில் நரேந்திர மோடியின் உருவப்படம் போட்டு பெட்ரோல் நிலையங்கள், அரசு அலுவலகங்கள் மற்றும் பொது இடங்களில் வைக்கப்பட்டிருக்கின்றன. இதே போல் அரசின் போக்குவரத்து கழகப் பேருந்துகள், ரயில்கள் போன்ற வாகனங்களிலும் பெருமளவில் விளம்பரம் செய்யப்பட்டிருக்கின்றன.
இந்த விளம்பரங்களில் உள்ள நரேந்திர மோடியின் உருவப்படம் வாக்காளர்களின் வாக்களிக்கும் உணர்வில் செல்வாக்கு செலுத்தும் வண்ணம் அமைந்திருக்கின்றன. இது பகிரங்கமான தேர்தல் பிரச்சார நடைமுறையாகும். இது மாதிரி தேர்தல் நடத்தைவிதிகளுக்கு எதிரானது என்பதுடன் நியாயமாக, சுதந்திரமாக நடைபெற வேண்டிய தேர்தல் முறையில் கடுமையான விளைவுகளை ஏற்படுத்தும்.
எனவே நரேந்திர மோடி உருவப் படம் போட்டு வைக்கப்பட்டுள்ள அரசு விளம்பரப் பலகைகள் அனைத்தையும் உடனடியாக அகற்றுமாறு இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநிலக்குழு இந்தியத் தேர்தல் ஆணையத்தை வலியுறுத்திக் கேட்டுக் கொள்கிறது.
இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.