மேற்கு வங்கத்தில் 2-ஆவது கட்ட தோ்தல் அமைதியாக நடந்தது: தோ்தல் ஆணையம் திட்டமிட்டபடி மே 3-ஆம் வாரத்தில் 12-ஆம் வகுப்பு தோ்வு முடிவு: சிபிஎஸ்இ வெறுப்புப் பேச்சுகளுக்கு எதிரான மனுக்கள்: உச்சநீதிமன்றம் தள்ளுபடி மேற்காசிய போரால் பணவீக்கம் அதிகரிக்கும் அபாயம்: நிதியமைச்சகம் அறிக்கை எத்தனால் கலப்பு விரிவாக்கம்: வாகன விதிமுறைகளில் மத்திய அரசு திருத்தம் கேரளம்: மாநிலம் முழுவதும் அறிவிக்கப்படாத தொடா் மின் வெட்டு; பல இடங்களில் வெடித்த போராட்டம்
/

பொய் வாக்குறுதிகளை வாரி இரைத்துள்ள அதிமுகவின் இணைப்பு தேர்தல் அறிக்கை: இந்திய கம்யூனிஸ்ட் கண்டனம்

அதிமுகவின் இணைப்பு தேர்தல் அறிக்கை பொய் வாக்குறுதிகளை வாரி இரைத்துள்ளதாக இந்திய கம்யூனிஸ்ட் கட்சி கண்டனம் தெரிவித்துள்ளது

News image
Updated On :25 மார்ச் 2019, 10:57 am

சென்னை: அதிமுகவின் இணைப்பு தேர்தல் அறிக்கை பொய் வாக்குறுதிகளை வாரி இரைத்துள்ளதாக இந்திய கம்யூனிஸ்ட் கட்சி கண்டனம் தெரிவித்துள்ளது

இதுதொடர்பாக இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் முத்தரசன் திங்களன்று விடுத்துள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது:

அனைத்திந்திய அண்ணாதிராவிட முன்னேற்றக் கழகம் இணைப்பு தேர்தல் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில் பல “பொய்வரலாறுகளையும்”, “பொய் வாக்குறுதிகளையும்” வாரி இரைத்துள்ளது. “ஏழு தமிழர்கள்” விடுதலைக்காக மத்திய அரசையும், குடியரசுத்தலைவர் அவர்களையும் வலியுறுத்துவதாக கூறப்பட்டுள்ளது.

“ஏழு தமிழர்களின்” விடுதலையில் அனைத்துக் கட்சிகளும் ஆதரித்த, மறைந்த ஜெயலலிதா முதலமைச்சாராக இருந்த போது கொண்டுவரப்பட்ட, சட்டமன்ற தீர்மானத்தை மத்திய மோடி அரசுக்கு அனுப்பிய பிறகும், தமிழக அமைச்சரவை ஏழுபேரையும், விடுவிக்க ஒப்புதல் தெரிவித்த பிறகும், உச்சநீதிமன்றமே வழிகாட்டிய பிறகும், மாநில ஆளுநர் எவ்வித நடவடிக்கையும் எடுக்காமல் இருப்பதையும், மத்திய மோடி அரசு இவ்விஷயத்தில் கனத்த மௌனமாக இருப்பதையும், எடப்பாடி பழனிச்சாமி அரசு கண்டு கொள்ளாமல் இருப்பதையும் தமிழக மக்கள் பார்த்துக் கொண்டுதான் இருக்கின்றார்கள்.

இதே போல், ‘நீட்’ தேர்வு வேண்டாம் என அனைத்துக் கட்சி ஆதரவுடன் நிறைவேற்றப்பட்ட தமிழக சட்டசபை தீர்மானமும் கிடப்பில் உள்ளது. இதற்கும் எடப்பாடி பழனிச்சாமி அரசு எந்த முயற்சியும் எடுக்கவில்லை.

தன்னையும், தன் அமைச்சரவையையும் காப்பாற்றிக் கொள்ள மோடியிடம் அடிமையாய் கிடக்கும் எடப்பாடி பழனிச்சாமியின் அதிமுக அரசு தற்போது தேர்தல் நேரத்தில் “பசப்பு நாடகம்” ஆடுவதை தமிழக வாக்காளர்கள் அறிந்தே வைத்துள்ளனர்.

நடைபெற உள்ள தேர்தலில் இவர்களுக்கு தமிழக மக்கள் தக்க பாடம் புகட்டுவார்கள்.

இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.