புதுக்கோட்டையில் காணாமல் போன வங்கி ஊழியர்: கடற்கரையில் பிணமாக கண்டெடுப்பு 

புதுக்கோட்டையில் காணாமல் போன வங்கி ஊழியரின் உடல் கோடியக்கரை கடற்கரையில் பிணமாக கண்டெடுக்கப்பட்டுள்ளது.
புதுக்கோட்டையில் காணாமல் போன வங்கி ஊழியர்: கடற்கரையில் பிணமாக கண்டெடுப்பு 

மணமேல்குடி: புதுக்கோட்டையில் காணாமல் போன வங்கி ஊழியரின் உடல் கோடியக்கரை கடற்கரையில் பிணமாக கண்டெடுக்கப்பட்டுள்ளது.

புதுகை திருக்கட்டளையைச் சேர்ந்த மாரிமுத்து என்ற வங்கிப் பணியாளர் கடந்த ஞாயிற்றுக்கிழமை முதல் வீட்டிலிருந்து காரில் சென்றவர் பின்னர் வீடு திரும்பவில்லை.  மறுநாள் திருவரங்குளம் காட்டுப் பகுதிக்குள் அவரது கார் எரிந்த நிலையில் மீட்கப்பட்டது. கணேஷ் நகர் காவல் நிலையத்தில் மாரிமுத்து காணவில்லை என்று மனைவி ராணி அளித்த புகார் பதிவு செய்யப்பட்டு விசாரணை நடத்தப்படுகிறது. வல்லத்திராக்கோட்டை காவல்நிலையத்தில் கார் எரிந்த வழக்கும் விசாரிக்கப்பட்டு வருகிறது.

இந்நிலையில், கடந்த 4 நாட்களாக வங்கிக்கு மாரிமுத்து வராதது மற்றும் வங்கியில் உள்ள நகைகள் பெருமளவில் காணவில்லை என்று கூறப்படும் நிலையிலும் வங்கியின் உயர் அலுவலர்கள் மற்றும் புதுக்கோட்டை காவல் துறை உயர் அலுவலர்களும் தீவிரமாக ஆலோசனை நடத்தி வருகின்றனர்.

இச்செய்தி வெளியே பரவத் தொடங்கிய நிலையில், குறிப்பிட்ட வங்கியில் நகைக் கடன் பெற்ற  வாடிக்கையாளர்கள் பலர் வியாழக்கிழமை வங்கிக்கு வந்தனர். தங்களது ரசீதை எடுத்து வந்த அவர்கள் தங்களின் நகை உள்ளதா என்பதை உறுதிப்படுத்த வந்ததாகத் தெரிவித்தனர்.

கணக்கு எடுக்கும் பணி தொடர்ந்து நடைபெறுவதாக வாடிக்கையாளர்களிடம் வங்கிப் பணியாளர்கள் தெரிவித்துள்ளனர். வங்கிக்கு காவல்துறை பாதுகாப்பும் போடப்பட்டிருந்தது.

மாரிமுத்துவைக் கண்டுபிடிக்கும் பணி தீவிரமாக நடைபெற்று வருவதாக காவல் துறை தரப்பில் கூறப்படுகிறது. வியாழக்கிழமை மாலை வரை வங்கித் தரப்பில் இருந்து எந்தப் புகாரும் அளிக்கப்படவில்லை என்றும் கூறப்படுகிறது.

இந்நிலையில் புதுக்கோட்டையில் காணாமல் போன வங்கி ஊழியரின் உடல் கோடியக்கரை கடற்கரையில் பிணமாக கண்டெடுக்கப்பட்டுள்ளது.

புதுக்கோட்டை மாவட்டம் மணமேல்குடி அருகேயுள்ள கோடியக்கரை கடற்கரையில் வெள்ளியன்று காலை ஆண் பிணம் ஒன்று ஒதுக்கியுள்ளது. இதுகுறித்த தகவலறிந்த மணமேல்குடி போலீசார், அது மாரிமுத்துவின் பிணமாக இருக்கலாம் என்ற சந்தகத்தின் பேரில்   உடனடியாக புதுகை போலீஸாருக்கு தகவலளித்தனர். 

அவர்கள் மாரிமுத்துவின் தாய், மனைவி மற்றும் குழநதைகளை அடையாளம் காண அழைத்து வந்தனர். அவர்கள் வந்து அடையாளம் காட்டியதன் பின்னர் அது மாரிமுத்துதான் என்பது உறுதி செய்யப்பட்டது.  போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.   

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com