
சென்னை: தமிழகத்தில் உள்ள 13 மாவட்டங்களில் அமைக்கப்பட்ட 46 வாக்குச்சாவடிகளில் முறையாக வாக்குப்பதிவு நடைபெறவில்லை, தவறு நடந்துள்ளது என்று தமிழக தலைமைத் தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாஹு கூறியுள்ளார்.
தலைமைச் செயலகத்தில் இன்று தமிழக தலைமைத் தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாஹு செய்தியாளர்களை சந்தித்தார்.
அப்போது அவர் கூறியதாவது, தமிழகத்தில் உள்ள 13 மாவட்டங்களில் அமைக்கப்பட்ட 46 வாக்குச்சாவடிகளில் முறையாக வாக்குப்பதிவு நடைபெறவில்லை, தவறு நடந்துள்ளது. இது குறித்து இந்திய தேர்தல் ஆணையத்துக்கு தகவல் அனுப்பப்பட்டுள்ளது.
மறு வாக்குப்பதிவு நடத்துவது குறித்து அரசியல் கட்சியின் பிரதிநிதிகளுடன் ஆலோசனை நடத்தப்படும்.
மறு வாக்குப்பதிவுக்கு தயாராகவே தேனி மற்றும் ஈரோடு மாவட்டங்களுக்கு வாக்குப்பதிவு இயந்திரங்கள் கொண்டு செல்லப்பட்டுள்ளன என்றும் சத்ய பிரதா சாஹு கூறியுள்ளார்.
13 மாவட்டங்களில் மட்டும் வாக்குப்பதிவு இயந்திரங்களில் பற்றாக்குறை இருந்ததையும் அவர் ஒப்புக் கொண்டுள்ளார்.
வாக்குப்பதிவு தொடங்குவதற்கு முன்பு, தேர்தல் அதிகாரிகளால் மாதிரி வாக்குப்பதிவு நடத்தப்படும். அப்போது 10 முறை வாக்கு இயந்திரங்களில் பல்வேறு கட்சிச் சின்னங்களில் வாக்களித்து சோதனை செய்வார்கள். பிறகு வாக்குப்பதிவுக்கு வைக்கும் போது மாதிரி வாக்குப் பதிவுக்காக பதிவு செய்த வாக்குகளை அழித்துவிட்டு வாக்குப்பதிவை பூஜ்யத்தில் வைத்துத் தொடங்குவார்கள். ஆனால், தேனி, ஈரோடு உள்ளிட்ட 13 மாவட்டங்களில் 46 வாக்குச்சாவடிகளில் அவ்வாறு பூஜ்யத்தில் வைக்காமல் வாக்குப்பதிவு தொடங்கியிருப்பதன் மூலம், வாக்குப்பதிவில் தவறுகள் நடந்திருப்பது தெரிய வந்திருப்பதாக கூறப்படுகிறது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.