தெலங்கானா மாநில ஆளுநராக தமிழக பாஜக தலைவர் தமிழிசை சௌந்தரராஜன் (செப்.1-ஆம் தேதி) ஞாயிற்றுக்கிழமை நியமிக்கப்பட்டார். தெலங்கானா, ஆந்திரம் ஒருங்கிணைந்த ஆளுநராக நரசிம்மன் செயல்பட்டு வந்தார். இந்நிலையில், தெலங்கானா ஆளுநராக தமிழிசை நியமிக்கப்பட்டுள்ளார்.
2014-ஆம் ஆண்டு முதல் தமிழக பாஜக தலைவராக தமிழிசை சௌந்தரராஜன் செயல்பட்டு வந்தார். தமிழக பாஜக தலைவர் பதவி நடப்பாண்டு டிசம்பர் மாதத்துடன் முடிவடையவுள்ள நிலையில் ஆளுநராக நியமிக்கப்பட்டுள்ளார். இதனால் தமிழக பாஜக தலைவர் பதவியில் இருந்து விடுவிக்கப்பட்டு புதிய தலைவர் நியமிக்கப்பட உள்ளார்.
நடந்து முடிந்த மக்களவைத் தேர்தலில் தூத்துக்குடி தொகுதியில் திமுக மகளிரணித் தலைவர் கனிமொழியை எதிர்த்துப் போட்டியிட்டு தோல்வியடைந்தார்.
ஆளுநராக நியமிக்கப்பட்டது தொடர்பாக, எதிர்பாராத நேரத்தில் இந்த பதவி எனக்கு அளிக்கப்பட்டிருக்கிறது. இது கடின உழைப்புக்கு பாஜக நிச்சயம் அங்கீகாரம் தரும் என்பதை பிரதமர் நரேந்திர மோடி, பாஜக தேசியத் தலைவரும், மத்திய உள்துறை அமைச்சருமான அமித் ஷா ஆகியோர் மீண்டும் நிரூபித்துள்ளனர். இதற்காக அவர்களுக்கும் செயல் தலைவர் ஜே.பி.நட்டாவுக்கும் நன்றி. தமிழக பாஜக தொண்டர்கள் மற்றும் அனைவருக்கும் நான் இந்த வெற்றியை சமர்பிக்கிறேன் என தமிழிசை சௌந்தரராஜன் மகிழ்ச்சி தெரிவித்தார்.