பாலாற்றில் தடுப்பணைக்கு எதிரான வழக்கு விசாரணை 4 வாரங்களுக்கு ஒத்திவைப்பு

பாலாற்றின் குறுக்கே புதிதாகத் தடுப்பணை கட்டப்படும் முயற்சிக்கு எதிர்ப்புத் தெரிவித்து தமிழக அரசு தொடுத்த வழக்கில், கூடுதல் ஆவணம்
பாலாற்றில் தடுப்பணைக்கு எதிரான வழக்கு விசாரணை 4 வாரங்களுக்கு ஒத்திவைப்பு
Published on
Updated on
1 min read


பாலாற்றின் குறுக்கே புதிதாகத் தடுப்பணை கட்டப்படும் முயற்சிக்கு எதிர்ப்புத் தெரிவித்து தமிழக அரசு தொடுத்த வழக்கில், கூடுதல் ஆவணம் தாக்கல் செய்ய ஆந்திர மாநில அரசு கால அவகாசம் கோரியதால், வழக்கு விசாரணையை நான்கு வாரங்களுக்கு ஒத்திவைத்து உச்சநீதிமன்றம் வெள்ளிக்கிழமை உத்தரவிட்டது.
 பாலாற்றின் குறுக்கே ஆந்திர பிரதேச அரசு பல இடங்களில் தடுப்பணைகளைக் கட்டியுள்ளது. இந்நிலையில், அம்மாநிலத்தின் சித்தூர் மாவட்டம், பெரும்பள்ளம், கணேசபுரம் ஆகிய பகுதிகளில் உள்ள தடுப்பணையின் உயரத்தை ரூ.50 கோடி செலவில் 5 அடியில் இருந்து 12 அடியாக உயர்த்த மாநில அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது. 
இதனால், தமிழகத்தின் நீராதாரம் முற்றிலும் தடைபடும் என்று கூறி, ஆந்திர அரசின் நடவடிக்கைக்கு தமிழக விவசாயிகள், அரசியல் கட்சிகளின் தலைவர்கள் கடும் எதிர்ப்புத் தெரிவித்து வருகின்றனர்.
இந்நிலையில், பாலாறு விவகாரத்தில் நிரந்தரத் தீர்வு காணக் கோரி தமிழக அரசு, மத்திய நீர்வளத் துறை அமைச்சகத்திற்கு கடிதம் எழுதியிருந்தது. ஆனால், அணை கட்டுவதில் ஆந்திர அரசு உறுதியாக இருந்து வருகிறது. 
இதனிடையே, பாலாறு அணை விவகாரம் தொடர்பாக உச்ச நீதிமன்றத்தில் நிலுவையில் இருந்த, தமிழக அரசு தொடுத்த வழக்கு கடந்த ஜூலையில் விசாரணைக்கு வந்தது. அப்போது, வழக்கின் விவரங்கள், முக்கிய அம்சங்கள் குறித்து தமிழக, ஆந்திர மாநில வழக்குரைஞர்களிடம் நீதிபதிகள் கேட்டறிந்தனர். 
பின்னர், பாலாறு அணை விவகாரம் தொடர்பாக விரிவாக விசாரிக்கும் வகையில் கூடுதல் ஆவணங்களைத் தாக்கல் செய்ய தமிழகம் மற்றும் ஆந்திர அரசுகளுக்கு 8 வாரங்கள் அவகாசம் அளித்திருந்தனர்.
இந்நிலையில், இந்த வழக்கு உச்சநீதிமன்ற நீதிபதிகள் நவீன் சின்ஹா, பி.ஆர்.கவய் ஆகியோர் அடங்கிய அமர்வு முன் வெள்ளிக்கிழமை விசாரணைக்கு வந்தது. தமிழக அரசின் தரப்பில் மூத்த வழக்குரைஞர் ஜி.உமாபதி ஆஜராகினார். அப்போது, ஆந்திர மாநில அரசின் சார்பில் ஆஜரான வழக்குரைஞர், இந்த வழக்கு தொடர்பாக கூடுதல் ஆவணங்களைத் தாக்கல் செய்ய மேலும் கூடுதல் அவகாசம் வழங்க வேண்டும் என கேட்டுக் கொண்டார். இதை ஏற்றுக் கொண்ட நீதிபதிகள், வழக்கு விசாரணையை நான்கு வாரங்களுக்கு ஒத்திவைத்து உத்தரவிட்டனர்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com