

சென்னை: தமிழகம் மற்றும் புதுச்சேரியில் தென்மேற்குப் பருவ மழை இயல்பான அளவை விட அதிகமாகவே பெய்து அசத்தி வருகிறது.
இந்த நிலையில், சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குநர் பாலச்சந்திரன் செய்தியாளர்களிடம் கூறியதாவது, தமிழகம் மற்றும் புதுச்சேரியில் சில நாட்களாக வளிமண்டல மேலடுக்கு சுழற்சியின் காரணமாக பரவலாக மழை பெய்துள்ளது.
தென்மேற்குப் பருவ மழையைப் பொறுத்தவரை கடந்த ஜூன் 1ம் தேதி முதல் தற்போது வரை 38 செ.மீ. மழை பெய்துள்ளது. இது இதே காலக்கட்டத்தில் பெய்யும் மழை அளவை விட 16 சதவீதம் கூடுதல்.
அதாவது, செப்டம்பர் மாதத்தைப் பொறுத்தவரை 10 செ.மீ. மழைதான் இயல்பான அளவு. ஆனால் இந்த மாதத்தில் 16 செ.மீ. அதாவது 53 சதவீதம் கூடுதலாக மழை பதிவாகியுள்ளது.
சென்னையைப் பொறுத்தவரை இதேக் காலக்கட்டத்தில் 59 செ.மீ. அளவுக்கு மழை பெய்துள்ளது.
வழக்கமாக செப்டம்பர் இறுதிவாக்கில் தென்மேற்குப் பருவ மழை நிறைவடையும். ஆனால், இப்போதிருக்கும் சூழ்நிலையைப் பார்த்தால் அக்டோபர் 2ம் வாரம் வரை தென்மேற்குப் பருவ மழை நீடிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
அதேப்போல, முன்னறிவிப்பின் படி வடகிழக்குப் பருவ மழை இயல்பான அளவிலேயே இருக்கும். அக்டோபர் 3வது வாரத்தில் 20ம் தேதிக்குப் பிறகு வடகிழக்குப் பருவ மழை துவங்க வாய்ப்புள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.