சென்னை: திமுக எம்.பி.க்கள் நாடாளுமன்றத்தையே நடுங்க வைத்துக் கொண்டிருக்கின்றனர் என்று கருணாநிதி நினைவு நாள் பொதுக்கூட்டத்தில் கட்சித்தலைவர் ஸ்டாலின் பேசியுள்ளார்.
மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதியின் முதலாமாண்டு நினைவு நாளை முன்னிட்டு, சென்னை கோடம்பாக்கத்தில் உள்ள முரசொலி அலுவலகத்தில், கருணாநிதியின் சிலையை மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி திறந்து வைத்தார்.
அதையடுத்து ராயப்பேட்டையில் நடைபெற்ற கருணாநிதி நினைவுதின பொதுக்கூட்டத்தில் மு.க.ஸ்டாலின் உரையாற்றினார். அப்போது அவர் பேசியதாவது:-
இந்தியாவில் கலைஞர் போன்ற தலைவர் எவரும் இல்லை. திராவிட முன்னேற்ற கழகத்தை கடந்த 50 ஆண்டுகளாக வளர்த்துக் கொடுத்தவர் கலைஞர்.
இனிவரும் காலங்களில் தமிழ்நாட்டின் பல ஊர்களில் கலைஞர் சிலை திறக்கப்படும்.
இந்திய அரசியல் சக்கரத்தை அப்போது சுழல வைத்தவர் கருணாநிதி.
முன்னெப்போதையும் விட கருணாநிதி இப்போது நமக்கு இன்னும் அதிகம் தேவைப்படுகிறார்.
கருணாநிதி என்றால் சமூக நீதியும், மாநில சுயாட்சியும் என்று பொருள். அவர்தான் மாநில சுயாட்சிக்காக ஆய்வு செய்ய ராஜமன்னார் ஆணையத்தை அமைத்தவர். தனது ஆட்சி கலைக்கப்பட்டபோது கூட கருணாநிதி தளராமல் தான் கொண்ட கொள்கைக்காக செயல்பட்டார்.
ஆனால் கருணாநிதி கண்ட சமூக நீதிக்கு உலை வைக்கும் விதமாக 10 சதவீத இட ஒதுக்கீடு தற்போது கொண்டு வரப்பட்டுள்ளது.
இந்தியாவில் தற்போது மாநில சுயாட்சி பறிக்கப்படும் நிலை தற்போது ஏற்பட்டுள்ளது.
அதேசமயம் தேர்வு செய்யப்பட்ட திமுக எம்.பி.க்கள் நாடாளுமன்றத்தையே நடுங்க வைத்துக் கொண்டிருக்கின்றனர்.
கருணாநிதி என்ன நினைப்பாரோ அதைதான் திமுக எம்.பி.க்கள் செய்து வருகின்றனர்.
தேசபக்தி பாடத்தை திமுகவுக்கு யாரும் கற்றுக் கொடுக்க வேண்டிய அவசியமில்லை.
இவ்வாறு அவர் பேசினார்.