புல்வாமா தாக்குதலை நடத்தியவர் பிரதமர் மோடி என கோவையில் நடந்த தேர்தல் பிரசாரத்தில் தேமுதிக பொருளாளர் பிரேமலதா பேசியிருப்பது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
அ.தி.மு.க. கூட்டணியில் இடம் பெற்றுள்ள தே.மு.தி.க. 4 தொகுதிகளில் போட்டியிடுகிறது. தே.மு.தி.க. வேட்பாளர்களை ஆதரித்து கடந்த காலங்களில் விஜயகாந்த் தேர்தல் பிரசாரம் செய்தார். தற்போது உடல் நலம் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த விஜயகாந்த், கூட்டணி கட்சி தலைவர்களுடன் மட்டும் பேச்சுவார்த்தை நடத்தினார். அவர் சுற்றுப்பயணம் மேற்கொள்ளவில்லை.
இதனால் அவரது மனைவி பிரேமலதா தீவிர தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டு வருகிறார். இந்நிலையில் கோவை, கணபதி பகுதியில் பா.ஜ.க. வேட்பாளர் சி.பி.ராதாகிருஷ்ணனுக்கு ஆதரவாக தேமுதிக பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த் வியாழக்கிழமை பிரசாரம் செய்தார்.
அப்போது அவர் சி.பி.ராதாகிருஷ்ணன் வெற்றி பெற முரசு சின்னத்துக்கு வாக்களியுங்கள் என தவறுதலாக குறிப்பிட்ட பிரேம லதா பின்னர் சுதாரித்துக்கொண்டு தாமரை சின்னத்தில் வாக்களியுங்கள் என்றார். தொடர்ந்து பேசிய அவர் புல்வாமா தாக்குதலுக்கு பதிலடி கொடுத்தவர் பிரதமர் மோடி என்று கூறுவதற்கு பதிலாக புல்வாமா தாக்குதலை நடத்தியவர் பிரதமர் என தெரிவித்தார்.
தற்போது அவரின் இந்த உளறல் பேச்சு சமூகவலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.