காற்றழுத்தத் தாழ்வு நிலை மற்றும் வெப்பச்சலனம் காரணமாக, தமிழகத்தின் 11 மாவட்டங்களில் நவ.17,18 ஆகிய இரண்டு நாள்கள் மழை பெய்ய வாய்ப்புள்ளது. சென்னையில் ஓரளவு மேகமூட்டமாக இருக்கும். சில இடங்களில் லேசான மழைக்கு பெய்யும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
திருவள்ளூர், காஞ்சிபுரம், வேலூர், ஈரோடு, சேலம், தேனி, நெல்லை, கோவை , நீலகிரி, ராமநாதபுரம், தூத்துக்குடி ஆகிய 11 மாவட்டங்களில் ஒரிரு இடங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளது.
இந்நிலையில், விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூரில் வெள்ளிக்கிழமை நள்ளிரவு முதல் பெய்த கனமழை காரணமாக கூமாப்பட்டி - பிளவக்கல் அணை செல்லும் கோவிந்தன்மேடு பகுதியில் பாலம் உடைந்து வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இதனால் அங்கு போக்குவரத்து துண்டிக்கப்பட்டுள்ளது.
வைகை ஆற்றின் நீர்பிடிப்பு பகுதிகளில் பெய்த கனமழையால் திடீர் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. நெல்லை, கடலூர் மற்றும் தூத்துக்குடி சுற்றுவட்டாரப் பகுதிகளில் சனிக்கிழமை அதிகாலை முதல் தொடர்ந்து மழை பெய்து வருகிறது.