கோவில்பட்டி கடலை மிட்டாய்க்கு புவிசார் குறியீடு

கோவில்பட்டி கடலை மிட்டாய்க்கு புவிசார் குறியீடு வழங்கப்பட்டுள்ளது. தூத்துக்குடி மாவட்டத்தில் மானாவாரி முறையில் கோவில்பட்டி, விளாத்திகுளம், எட்டயபுரம், கயத்தாறு, ஓட்டப்பிடாரம் பகுதிகளில்
கோவில்பட்டி கடலை மிட்டாய்க்கு புவிசார் குறியீடு

கோவில்பட்டி கடலை மிட்டாய்க்கு புவிசார் குறியீடு வழங்கப்பட்டுள்ளது. தூத்துக்குடி மாவட்டத்தில் மானாவாரி முறையில் கோவில்பட்டி, விளாத்திகுளம், எட்டயபுரம், கயத்தாறு, ஓட்டப்பிடாரம் பகுதிகளில் விவசாயம் நடைபெறுகிறது. நவதானியங்கள், எண்ணெய் வித்துக்கள் சாகுபடியும் இந்த மண்ணுக்கே உரித்தான மகிமை. மழை பெய்யும் பருவ காலத்தில் நெல் பயிரிடுவதற்கு பதிலாக கோவில்பட்டி நிலக்கடலை பயிர் செய்கிறார்கள். தரமான நிலக்கடலை, மண்டை வெல்லம் கிடைப்பதால் கடலை மிட்டாய் உற்பத்தியில் கோவில்பட்டி சிறப்பு பெற்று விளங்குகிறது.

தயாரிக்கும் முறை: கடலை மிட்டாய் தயார் செய்யும் பக்குவத்தைப் பார்த்தாலே நாக்கில் எச்சில் ஊற தொடங்கிவிடுகிறது. வெல்லத்துடன் தேவையான அளவு தண்ணீர் கலந்து, சரி பாதியாக வரும் வரை காய்ச்சி பாகு தயார் செய்து கொள்கிறார்கள். அதாவது, 10 கிலோ மண்டை வெல்லத்தில் 7 முதல் 8 லிட்டர் வரை தண்ணீர் சேர்த்து நன்றாக காய்ச்சி பாகு தயாரிக்கிறார்கள். காய்ச்சியதும் அதில் படியும் மண்டியை அப்புறப்படுத்திவிட்டு தெளிந்த பாகுவை கடலை மிட்டாய் தயாரிக்க பத்திரப்படுத்துகிறார்கள். மறுநாள் அந்த வெல்லப்பாகுவை மீண்டும் வாணலியில் போட்டு காய்ச்சுகிறார்கள். 

அடிபிடித்துவிடாமல் இருக்க கரண்டியால் கிளறிவிட்டுக்கொண்டே இருக்கிறார்கள். பொன் நிறமாக மாறும் பதத்திற்கு வெல்லப்பாகு சற்று நேரத்தில் வருகிறது. பின்னர், உடைத்து வைக்கப்பட்ட நிலக்கடலை பருப்பை அதில் போடுகிறார்கள். வாணலியில் வெல்லப்பாகுவை 2 லிட்டர் ஊற்றிருந்தால் 2 கிலோ அளவுக்கு நிலக்கடலை பருப்பு போடுகிறார்கள். பின்னர் கிளறிவிட்டு புரோட்டா மாவு போன்று மொத்தமாக கடலைபருப்பு - வெல்லப்பாகு கலவையை உருட்டி பெரிய உருண்டையாக எடுக்கிறார்கள்.

அதனை ஒரு மரப்பலகை தட்டில் வைத்து சப்பாத்தி உருட்டும் கட்டையைக் கொண்டு, இரும்பினால் செய்யப்பட்ட உருளையால் உருட்டி பரப்புகிறார்கள். அந்த மரத்தட்டில் ஒட்டாமல் இருப்பதற்காக கிழங்கு மாவை ஏற்கெனவே அதில் தடவி வைக்கிறார்கள். அதில் 5  நிமிடங்களில் வெல்லப்பாகு, கடலை பருப்பு சேர்ந்த கடலை அந்த தட்டில் உறைந்து கடலை மிட்டாய் ஆகிவிடுகிறது.
வயது வித்தியாசமின்றி சிறுவர் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விரும்பி சாப்பிடும் மிட்டாய் கடலை மிட்டாய். மண்ணுக்கு பெருமை சேர்த்த கோவில்பட்டி கடலை மிட்டாய் மக்களிடம் பெரும் வரவேற்பை பெற்றிருக்கிறது.

கோவில்பட்டி கடலை மிட்டாய்க்கு தனி ருசி உண்டு. கோவில்பட்டி என்றும் கடலை மிட்டாயை நினைவுகூரும் அளவிற்கு தனிப்பெயர் பெற்றுள்ளது. இந்நிலையில், கடலை மிட்டாய்க்கு புவிசார் குறியீடு பெற 2014இல் அப்போது சார் ஆட்சியராக இருந்த விஜயகார்த்திகேயன் மூலம் விண்ணப்பிக்கப்பட்டது. பின்னர், புவிசார் குறியீட்டு அலுவலகத்தின் அறிவுறுத்தலில் கோவில்பட்டி வட்டார கடலை மிட்டாய் உற்பத்தியாளர் மற்றும் விற்பனையாளர் நலச் சங்கம் என்ற பெயரில் மறுசீரமைப்பு செய்யப்பட்ட விண்ணப்பங்கள் 2019இல் சமர்ப்பிக்கப்பட்டது. 

இதையேற்று கோவில்பட்டி கடலை மிட்டாய்க்கு புவிசார் குறியீடு வழங்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் காஞ்சிபுரம் பட்டு, விருப்பாச்சி வாழைப்பழம், கொடைக்கானல் மலைப்பூண்டு, ஈரோடு மஞ்சள், பழனி பஞ்சாமிர்தம் என 33 பொருள்களுக்கு ஏற்கெனவே புவிசார் குறியீடு வழங்கப்பட்டுள்ளது. இந்நிலையில், 34ஆவது பொருளாக கோவில்பட்டி கடலை மிட்டாய்க்கு புவிசார் குறியீடு கிடைக்கப்பெற்றுள்ளது.

இதுகுறித்து கோவில்பட்டி வட்டார கடலை மிட்டாய் உற்பத்தியாளர்கள் மற்றும் விற்பனையாளர் சங்கத் துணைத் தலைவர் வி.வி.ஆர்.ராமசந்திரன் கூறியது: கோவில்பட்டியில் சுமார் 150 கடலை மிட்டாய் கடைகள் உள்ளன. இதில் 3 ஆயிரத்திற்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் பணியில் ஈடுபட்டுள்ளனர். ஒரு கிலோ கடலை மிட்டாய் ரூ.150-க்கு விற்பனை செய்யப்படுகிறது. தற்போது புவிசார் குறியீடு கிடைத்துள்ளது எங்களுக்கு கிடைத்த அங்கீகாரம். எங்கள் வாழ்வாதாரம் பாதுகாக்கப்பட்டுள்ளது. 

புவிசார் குறியீடு தற்போது கிடைத்துள்ளதையடுத்து கடலை மிட்டாய்க்கு வெளிநாடுகளில் இருந்தும் ஆர்டர்கள் கிடைக்கும். வேலைவாய்ப்பு மேலும் பெருகும். புவிசார் குறியீடு கிடைக்க மூலக்காரணமாக செயல்பட்ட அப்போதைய கோவில்பட்டி சார் ஆட்சியரும், தற்போதைய திருப்பூர் மாவட்ட ஆட்சியருமான விஜயகார்த்திகேயனுக்கும், புவிசார் குறியீடு பெற உறுதுணையாக இருந்த தமிழக செய்தி மற்றும் விளம்பரத் துறை அமைச்சர் கடம்பூர் செ.ராஜு மற்றும் புவிசார் குறியீடு அதிகாரிகளுக்கும் கடலை மிட்டாய் உற்பத்தியாளர்கள் மற்றும் விற்பனையாளர்கள் சார்பில் நன்றி என்றார்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com