
கம்பம்: தேனி மாவட்டம் கம்பம் பள்ளத்தாக்கு பகுதியில் உள்ள நன்செய் நிலங்களுக்கு முதல் போக சாகுபடி செய்ய வியாழக்கிழமை முல்லைப் பெரியாறு அணையில் இருந்து வினாடிக்கு 300 கன அடி நீர் திறக்கப்பட்டது.
தேனி மாவட்டம் கம்பம் பள்ளத்தாக்குப் பகுதியில் உள்ள நன்செய் நிலங்கள் 14 ஆயிரத்து 707 ஏக்கர் பரப்பளவில் உள்ளது. ஆண்டுதோறும் ஜூன் மாதம் முதல் போக சாகுபடிக்கு முல்லைப் பெரியாறு அணையில் இருந்து தண்ணீர் திறந்து விடப்படும்.
இந்த ஆண்டு அணையில் நீர்மட்டம் குறைவால் முதல்போக சாகுபடிக்கு தண்ணீர் திறப்பது தாமதமாகியது. கடந்த சில நாட்களாக தென்மேற்கு பருவமழை அணை பகுதிகளில் தொடர்ந்து பெய்ததால் அணை நீர்மட்டம் உயர்ந்தது.
இதனால் கம்பம் பள்ளத்தாக்கு பகுதிக்கு முதல் போக சாகுபடிக்கு பணிகள் தொடர தண்ணீர் திறக்க தமிழக அரசு புதன்கிழமை உத்தரவிட்டது.
அதன்பேரில் வியாழக்கிழமை முல்லைப் பெரியாறு அணையிலிருந்து தமிழகப் பகுதிக்கு தண்ணீர் செல்லும் தலை மதகு வழியாக தண்ணீர் திறக்கப்பட்டது. எஸ்.டி.கே.ஜக்கையன், மாவட்ட ஆட்சியர் பல்லவி பல்தேவ் காவல் கண்காணிப்பாளர் இ.சாய்சரண் தேஜஸ்வி ஆகியோர் மலர்தூவி வரவேற்றனர்.
தண்ணீர் திறப்பு நிகழ்ச்சியில் கம்பம் சட்டமன்ற உறுப்பினர் எஸ். டி .கே . ஜக்கையன் கூறியது, கம்பம் பள்ளத்தாக்கு பகுதியில் உள்ள, 14 ஆயிரத்து 707 ஏக்கர் நன்செய் நிலங்களுக்கு முதல்போக சாகுபடிக்காக தமிழக முதல்வர், துணை முதல்வர் உத்தரவின் பேரில் தண்ணீர் திறந்துவிடப்பட்டுள்ளது.
அணையிலிருந்து வினாடிக்கு, 300 கன அடி தண்ணீர் திறந்து விடப்படுகிறது.
தேனி மாவட்ட மக்களின் குடிநீர் தேவைக்காக 100 கன அடி, பாசனத்திற்கு 200 கன அடி தண்ணீர் திறந்து விடப்படுகிறது.
அணையின் நீர்மட்டம் நிலவரப்படி தொடர்ந்து 120 நாட்களுக்கு கம்பம் பள்ளத்தாக்கு பகுதிகளுக்கு தண்ணீர் திறந்து விடப்படும். விவசாயிகள், பொதுமக்கள் தண்ணீரை சிக்கனமாக பயன்படுத்தி கொள்ள வேண்டுகிறேன் என்றார்.
அணை செயற்பொறியாளர் சாம் இர்வின் உதவி பொறியாளர்கள், விவசாயிகள் கலந்து கொண்டனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.