தொடர் மழை காரணமாக புதுச்சேரியில் அரசு, தனியார் பள்ளிகளுக்கு நாளை விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
இலங்கையின் மீது மையம் கொண்டிருந்த புரெவி புயல் மேற்கு-வடமேற்கு திசையை நோக்கி கடந்த 6 மணி நேரத்தில் மணிக்கு 13 கிலோமீட்டர் வேகத்தில் நகர்ந்து, இன்று காலை 11.30 மணியளவில் மன்னார் வளைகுடாவுக்கு வடமேற்கே 40 கி.மீ தொலைவிலும், பாம்பனுக்கு தென்கிழக்கே 40 கி.மீ தொலைவிலும், கன்னியாகுமரிக்கு வடகிழக்கே 260 கி.மீ தொலைவிலும், மையம் கொண்டிருந்தது.
இந்த புரெவி புயல் மேற்கு நோக்கி நகர்ந்து இன்று மாலைக்குள் பாம்பனை நெருங்கிவிடும். பின் மேற்கு - தென் மேற்கு திசையில் நகர்ந்து பாம்பன் - கன்னியாகுமரி இடையே இன்று இரவு மற்றும் நாளை அதிகாலை கரையைக் கடக்கும். அப்போது மணிக்கு 70 கி.மீ முதல் 90 கி.மீ வேகத்தில் புயல் காற்று வீசும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. புரெவி புயல் காரணமாக தமிழகம் மற்றும் புதுச்சேரியில் கடந்த 2 நாள்களாக பரவலாக மழை பெய்து வருகிறது.
இதனால் பாதுகாப்புக் கருதி புதுச்சேரியில் அரசு, தனியார் பள்ளிகளுக்கு நாளை விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.