நெய்வேலி: கடலூர் மாவட்டம், பண்ருட்டி அருகே மழையின் காரணமாக இருவேறு இடங்களில் வீடு இடிந்து விழுந்ததில் சிறுமி, மூதாட்டி உயிரிழந்தனர்.
கடலூர் மாவட்டம் பண்ருட்டி அருகே வீடு இடிந்து விழுந்ததில் மூதாட்டி ஒருவர் வெள்ளிக்கிழமை உயிரிழந்தார்.
வங்கக் கடலில் உருவான புயல் காரணமாக கடலூர் மாவட்டத்தில் கடந்த புதன்கிழமை முதல் இடைவிடாமல் தொடர் மழை பெய்து வருகிறது. இதனால் தாழ்வான பகுதிகளில் தண்ணீர் தேங்கி வெள்ளக்காடாக காட்சி அளிக்கிறது.
இந்நிலையில், பண்ருட்டி அடுத்துள்ள பெரியகாட்டுப்பாளையம் கிராமத்தைச் சேர்ந்தவர் ரங்கநாதன் விவசாயி. இவரது மனைவி தனமயில்(60). இருவரும் சிமெண்ட் ஓடு போட்ட வீட்டில் தனியாக வசித்து வந்தனர்.
வியாழக்கிழமை இரவும் மழை தொடர்ந்தது. வெள்ளிக்கிழமை அதிகாலை மழையின் காரணமாக சிவமூர்த்தி என்பவரது ஓட்டு வீட்டின் சுவர் இடிந்து ரங்கநாதன் வீட்டின் மீது விழுந்தது. இதில் ரங்கநாதன் வீடு முழுவதும் சேதம் அடைந்தது. வீட்டில் உறங்கிக் கொண்டிருந்த போது இடிபாடுகளில் சிக்கி உயிரிழந்தார். ரங்கநாதன் அதிர்ஷ்டவசமாக காலில் காயத்துடன் உயிர் தப்பினார். இந்த விபத்தில் சண்முகம் என்பவரது வீடும் சேதம் அடைந்தது.
பண்ருட்டி ஒன்றியம், நத்தம் காலனியில் வசிப்பவர் முருகன்(35). இவருக்கு வள்ளி என்ற மனைவி, வேலு(10),சஞ்சனா(8), கிருபாசங்கரி(6) ஆகிய3குழந்தைகள் உள்ளனர். வியாழக்கிழமை இரவு அனைவரும் தங்களது குடிசை வீட்டில் தூக்கிக்கொண்டிருந்தனர். இரவு 11.50 மணி அளவில் வீட்டின் ஒருபக்கம் சுவர் இடித்து விழுந்தது. இதன் இடிபாடுகளில் சிக்கி சஞ்சனா உயிரிழந்தார். மற்றவர்கள் அதிர்ஷ்ட வசமாக உயிர் தப்பினர். இறந்த சஞ்சனாவின் உடல் பண்ருட்டி அரசு மருத்துவமனை பிணவறையில் வைக்கப்பட்டுள்ளது.