பாஜகவின் அறிவுசார் பிரிவின் தலைவராக இருந்த அர்ஜுன மூர்த்தி நடிகர் ரஜினி தொடங்க உள்ள கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளராக நியமிக்கப்பட்ட நிலையில் அறிவுசார் பிரிவின் புதிய தலைவரை பாஜக அறிவித்துள்ளது.
நடிகர் ரஜினிகாந்த் ஜனவரி மாதம் கட்சி தொடங்க உள்ளதாக வியாழக்கிழமை அறிவித்தார். தொடர்ந்து தான் தொடங்க உள்ள கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளராக அர்ஜுன மூர்த்தி என்பவரை நியமித்தார்.
பாஜகவின் முக்கிய நிர்வாகியாக இருந்த அர்ஜுனமூர்த்தி அக்கட்சியின் அறிவுசார் பிரிவின் தலைவராக செயல்பட்டு வந்த நிலையில் பாஜகவிலிருந்து ராஜினாமா செய்தார். அதனைத் தொடர்ந்து அவரை கட்சியின் அனைத்துவிதமான பொறுப்புகளிலிருந்தும் விடுவிப்பதாக பாஜக மாநிலப் பொதுச்செயலாளர் கரு.நாகராஜன் அறிவித்தார்.
இந்நிலையில் தமிழக பாஜகவின் அறிவுசார் பிரிவின் தலைவராக பிரபல ஜோதிடர் ஷெல்வீயை நியமித்து அக்கட்சி அறிவிப்பு வெளியிட்டுள்ளது.