
தம்மம்பட்டி: சேலம் மாவட்டம் கெங்கவல்லி அருகே வீரகனூர் சுற்றுவட்டார பகுதிகளில், கால்நடைகளுக்கு வேகமாக பரவும் கழிச்சல் நோய் மற்றும் பெரியம்மை நோய் பரவி வருவதால் திடீர் திடீரென கால்நடைகள் உயிரிழந்து வருவதால் விவசாயிகள் வேதனை அடைந்துள்ளனர்.
தமிழகம் முழுவதிலும் பரவலாக மாடுகளுக்கு பெரியம்மை நோய் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இதன் ஒரு பகுதியாக வீரகனூர் சுற்றுவட்டாரப் பகுதிகளிலும் பசு மாடுகளுக்கு பெரியம்மை நோய் மற்றும் கழிச்சல் நோய் ஏற்பட்டுள்ளது. குறிப்பாக ஆடுகளுக்கு கழிச்சல் நோய் ஏற்பட்டு உயிரிழப்புகள் ஏற்படுகிறது. சில விவசாயிகளின் பசு மாடுகள் கூட நோய் தாக்குதலுக்குள்ளாகி, சரிவர உணவு உள்கொள்ளாமல் சத்துக் குறைபாடுடன்,உயிரிழந்து விடுவதாகவும் கூறப்படுகிறது.
விவசாயத்திற்கு முதுகெலும்பாக கருதப்படும் ஆடு,மாடு உள்ளிட்ட கால்நடைகள் இதுபோன்ற மழை காலங்களில் திடீர் திடீரென இறந்து விடுவது வேதனை அளிப்பதாக விவசாயிகள் தெரிவிக்கின்றனர்.
கால்நடைகள் மூலமாக வரும் வருமானத்தை வைத்துதான் விவசாயம் செய்து வருவதாகவும், அந்த விவசாயமும் தற்சமயம் தொடர் மழையால் பாதிக்கப்பட்டு விட்டதால், இந்த வருடம் தங்களுக்கு பெருத்த நஷ்டம் என்றும் விவசாயிகள் கூறுகின்றனர்.
இழப்பீடு கேட்டு விண்ணப்பம் செய்ய போனால், மழை வெள்ளத்தில் இறந்தால் மட்டுமே இழப்பீடு வழங்க முடியும் என்று கிராம நிர்வாக அலுவலர் மற்றும் மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர். தங்களது இறந்த கால்நடைகளை புதைத்து விடுவதாகவும் தெரிவிக்கின்றனர்.
ஆகவே, தமிழக அரசு உயிரிழப்பு ஏற்படும் அனைத்து விதமான கால்நடைகளுக்கும் உரிய இழப்பீடு வழங்கி விவசாயிகளின் வாழ்வாதாரத்தை பாதுகாக்க வேண்டும் என்று கோரிக்கை எழுந்துள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.