சேலம் மாவட்டம் தலைவாசல் அருகே உள்ள லத்துவாடி கிராமத்தில் அம்மா மினி கிளினிக்கை குத்துவிளக்கேற்றி தொடங்கி வைத்தார் முதல்வர் எடப்பாடி.கே.பழனிசாமி.
சேலம் மாவட்டம் தலைவாசல் அருகே உள்ள லத்துவாடி கிராமத்தில் அம்மா மினி கிளினிக்கை குத்துவிளக்கேற்றி தொடங்கி வைத்தார் முதல்வர் எடப்பாடி.கே.பழனிசாமி.

அடுத்த ஆண்டு அரசுப் பள்ளிகளைச் சேர்ந்த மேலும் 135 மாணவர்கள் மருத்துவம் பயில வாய்ப்பு: முதல்வர் பழனிசாமி

தமிழக அரசின் இட ஒதுக்கீடு மூலம் அடுத்த ஆண்டு அரசுப் பள்ளிகளை சேர்ந்த மேலும் 135 மாணவர்கள் மருத்துவக் கல்வியில் சேர முடியும் என்று முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமி தெரிவித்தார். 

சேலம்: தமிழக அரசின் இட ஒதுக்கீடு மூலம் அடுத்த ஆண்டு அரசுப் பள்ளிகளை சேர்ந்த மேலும் 135 மாணவர்கள் மருத்துவக் கல்வியில் சேர முடியும் என்று முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமி தெரிவித்தார். 

தமிழகம் முழுவதும் ஏழை எளிய மக்கள் பயன்பெறும் வகையில் அம்மா மினி கிளினிக் திட்டம் தொடங்கப்பட்டு வருகிறது.

சேலம் மாவட்டம் தலைவாசல் அருகே உள்ள லத்துவாடி கிராமத்தில் அம்மா மினி கிளினிக் திறப்பு விழா வியாழக்கிழமை நடைபெற்றது.

முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமி அம்மா மினி கிளினிக்கை திறந்து வைத்தார். பின்னர் நடைபெற்ற விழாவில் அவர் பேசியது: 

டிசம்பர் 31 ஆம் தேதிக்குள் தமிழகம் முழுதும் அனைத்து இடங்களிலும் இரண்டாயிரம் அம்மா மினி கிளினிக் திறக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. கிராமங்களில் வசிக்கும் ஏழை எளிய மக்கள் அவர்கள் வாழ்விடங்களிலியே மருத்துவ வசதி பெறுவதை அம்மா மினி கிளினிக் உறுதி செய்கிறது.  இதன் மூலம் நோய் பாதிப்புகள் ஆரம்ப நிலையிலேயே கண்டறியப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு குணப்படுத்த முடியும்

ரத்தத்தை வியர்வையாக சிந்தி உழைக்கும் வர்க்கமே விவசாயிகள், நானும் விவசாயி என்ற அடிப்படையில் ஊரகப்பகுதி விவசாயிகள், விவசாயக் கூலித் தொழிலாளர்கள் மற்றும் ஏழை எளிய மக்கள் என அனைவருக்கும் மருத்துவசேவை கிடைக்க வேண்டும் என  தொடங்கப்பட்டதே அம்மா மினி கிளீனிக் என்றார்.

கிராமத்தில் உள்ளவர்களுக்கு காய்ச்சல் உள்ளிட்ட பிரச்னைகள் ஏற்பட்டால் உடனடியாக இங்கு சிகிச்சை பெறலாம் என்ற முதல்வர், அரசின் நடவடிக்கையால் தமிழகத்தில் கரோனா தொற்று தற்போது குறைந்துள்ளது.

கரோனா தொற்று அதிகளவில் இருந்தபோது கேரளம், தில்லி உள்ளிட்ட பிற மாநிலங்களை மேற்கோள் காட்டி பேசிய எதிர்க்கட்சிகள் தற்போது எங்கே போனார்கள் என வினவினார்.

தொடர்ந்து பேசிய அவர் தலைவாசல் பகுதியில் ஆசியாவிலேயே மிகப்பெரிய கால் நடைப்பூங்கா துவங்கப்பட்டுள்ளது. இது கட்டிமுடிக்கப்பட்ட பிறகு கெங்கவல்லி சட்டப்பேரவைத் தொகுதி உலகளவில் புகழ் பெறும் என்றார். 

மருத்துவ கல்லூரிகளில் உள் இட ஒதுக்கீடு தொடர்பாக  மக்கள் யாரும் கோரிக்கை வைக்காமலேயே , வழங்கப்பட்டதின் காரணமாக, இந்த ஆண்டு 313 அரசுப் பள்ளி மாணவர்களுக்கு இடம் கிடைத்துள்ளது. 

தமிழகத்தில் மேலும் 11 அரசு மருத்துவக் கல்லூரிகள் தொடங்கப்பட்டதால் 1650 மருத்துவ கல்வி இடங்கள் புதிதாக உருவாக்கப்பட்டுள்ளன. இதனால் அடுத்தாண்டு அரசுப்பள்ளி மாணவ, மாணவியர் 435 பேருக்கு மருத்துவக் கல்லூரியில் இடம் கிடைக்கும். நாட்டிற்கு உணவளிக்கும் விவசாயிகள், விவசாயத் தொழிலாளர்களின் குழந்தைகள் மருத்துவ கல்வி பயில்வதற்கு தமிழக அரசு வாய்ப்பு ஏற்படுத்தியுள்ளது என்று முதல்வர் பழனிசாமி கூறினார்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com