

தஞ்சாவூர் மாவட்டத்தில் ஏற்கெனவே பெய்த தொடர் மழையால் நெற் பயிர்கள் சாய்ந்துவிட்ட நிலையில் மீண்டும் மழை பெய்வதால் மீண்டும் முளைக்கத் தொடங்கியுள்ளன.
மாவட்டத்தில் டிசம்பர் முதல் வாரத்தில் புரெவி புயலின்போது பலத்த மழை பெய்தது. கிட்டத்தட்ட ஒரு வாரம் பெய்த இந்த மழையின்போது இடையிடையே பலத்த காற்று வீசியதால் அறுவடைக்குத் தயார் நிலையிலிருந்த சம்பா, தாளடி பருவ நெற் பயிர்கள் தண்ணீரில் மூழ்கின. மேலும், தொடர்ந்து பெய்த மழையால் வடிகால் வசதி தடைப்பட்டுள்ள பகுதிகளில் இளம் பயிர்கள் தண்ணீரில் மூழ்கின. இதனால், மாவட்டத்தில் ஏறத்தாழ 11,730 ஹெக்டேரில் இளம் பயிர்கள், அறுவடைக்குத் தயாராக இருந்த முற்றிய பயிர்கள் பாதிக்கப்பட்டன.
இதையடுத்து, கடந்த ஒரு வாரமாக மழை நின்று, வெயில் நிலவியது. இதன் மூலம், வயலில் தேங்கிய தண்ணீர் வடிந்தது. இதைத்தொடர்ந்து பாதிக்கப்பட்ட இளம் பயிர்களைக் காப்பாற்றும் முயற்சியில் விவசாயிகள் ஈடுபட்டு வந்தனர். முற்றிய பயிர்களை விவசாயிகள் அறுவடை செய்தாலும், மகசூல் இழப்பு ஏற்பட்டது. ஏக்கருக்கு சராசரியாக 35 மூட்டைகள் கிடைக்க வேண்டிய நிலையில் 10, 12 மூட்டைகள் மட்டுமே கிடைத்ததால், விவசாயிகள் நட்டத்தைச் சந்தித்துள்ளனர்.
இந்நிலையில், மாவட்டத்தில் புதன்கிழமை அதிகாலை முதல் மீண்டும் மழை பெய்து வருகிறது. புதன்கிழமை பகலில் லேசான தூறல் இருந்தாலும், இரவில் மீண்டும் பெய்தது. இதேபோல, வியாழக்கிழமை அதிகாலை முதல் மாவட்டத்தில் பரவலாக மழை பெய்கிறது. இதனால், ஏற்கெனவே சாய்ந்த நெற் பயிர்கள் தண்ணீரில் மூழ்கி மீண்டும் முளைக்கத் தொடங்கியுள்ளன. இதேபோல, தண்ணீரில் கொட்டிய நெற் கதிர்களும் ஈரப்பதத்தால் முளைத்துள்ளன. எனவே, இப்பயிர்களை இனிமேல் காப்பாற்ற முடியாது என்கின்றனர் விவசாயிகள். இந்த நிலைமை தஞ்சாவூர் அருகேயுள்ள உளூர், துறையுண்டார்கோட்டை, சடையார்கோவில் உள்ளிட்ட பகுதிகளில் காணப்படுகிறது.
இதுகுறித்து பாதிக்கப்பட்ட விவசாயிகள் தெரிவித்தது:
ஆகஸ்ட் மாதத்திலேயே சம்பா சாகுபடியைத் தொடங்கிவிட்டோம். நன்கு வளர்ந்து வந்த நிலையில் மழை இல்லாவிட்டால் அறுவடை செய்திருப்போம். ஆனால், எதிர்பாராத விதமாக புரெவி புயலால் பயிர்கள் சாய்ந்துவிட்டன.
வயலில் தேங்கிய தண்ணீர் வடியாத நிலையில் மீண்டும் மழை பெய்துள்ளதால் சாய்ந்த பயிர்கள் முளைத்து வருகின்றன. இனிமேல் இப்பயிரைக் காப்பாற்ற முடியாது. இதுவரை ஏக்கருக்கு ரூ. 35,000 செலவு செய்துள்ளோம். அரசு உரிய நிவாரணம் வழங்கினால்தான் இழப்பிலிருந்து மீள முடியும் என்றனர் விவசாயிகள்.
நிலக்கடலையும் பாதிப்பு:
இதேபோல, திருவோணம் வட்டாரத்தில் பல கிராமங்களில் நிலக்கடலை விதைக்கப்பட்டது. சில நாள்களாகப் பெய்து வரும் மழையால் அனைத்து வயல்களிலும் தண்ணீர் தேங்கி நிற்கிறது. இதனால், அனைத்து விதைகளும் முளைப்புத் திறன் பாதிக்கப்பட்டுள்ளது என்றனர் விவசாயிகள்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.