கரூர் கூட்ட நெரிசல் பலி விவகாரம் : செந்தில் பாலாஜியிடம் 6 மணி நேரம் சிபிஐ விசாரணை!தொகுதிப் பங்கீடு: திமுக - மார்க்சிஸ்ட் கம்யூ. 3-ம் சுற்றுப் பேச்சுவார்த்தை! தமிழக தேர்தல்: 2 நாள்களில் ரூ. 23 கோடி பணம், பரிசுப் பொருள்கள் பறிமுதல்!பாமக வழக்கு: ராமதாஸுக்கு பின்னடைவு! தேர்தல் முடிந்தபிறகே விசாரணை!புதுச்சேரியில் 2-ம் நாளாக யாரும் வேட்புமனு தாக்கல் செய்யவில்லைதமிழ்நாடு உள்பட 5 மாநிலங்களுக்கு 1,111 தேர்தல் பார்வையாளர்கள்!
/

காஞ்சிபுரத்தில் 26 சிறு மருத்துவமனைகள் தொடங்கப்படும்: அமைச்சர் பா.பென்ஜமின்

காஞ்சிபுரத்தில் 26 சிறு மருத்துவமனைகள் தொடங்கப்பட இருப்பதாகவும் முதற்கட்டமாக 7 சிறு மருத்துவமனைகள் திறக்கப்பட்டிருப்பதாகவும் தமிழக ஊரகத் தொழில்துறை அமைச்சர் பா.பென்ஜமின் வெள்ளிக்கிழமை பேசினார்.

News image
போந்தூரில் சிறு மருத்துவமனையைக் குத்து விளக்கேற்றித் திறந்து வைக்கிறார் தமிழக ஊரகத் தொழில்துறை அமைச்சர் பா.பென்ஜமின்
Updated On :18 டிசம்பர் 2020, 11:41 am

DIN

காஞ்சிபுரத்தில் 26 சிறு மருத்துவமனைகள் தொடங்கப்பட இருப்பதாகவும் முதற்கட்டமாக 7 சிறு மருத்துவமனைகள் திறக்கப்பட்டிருப்பதாகவும் தமிழக ஊரகத் தொழில்துறை அமைச்சர் பா.பென்ஜமின் வெள்ளிக்கிழமை பேசினார்.

காஞ்சிபுரம் மாவட்டம் போந்தூரில் சிறு மருத்துவமனை திறப்பு விழா ஆட்சியர் மகேஸ்வரி ரவிக்குமார் தலைமையில் நடைபெற்றது.ஸ்ரீபெரும்புதூர் எம்.எல்.ஏ.கே.பழனி,முன்னாள் அமைச்சர் வி.சோமசுந்தரம்,காஞ்சிபுரம் மாவட்ட மத்தியக் கூட்டுறவு வங்கியின் தலைவர் வாலாஜாபாத்.பா.கணேசன்,நகரக் கூட்டுறவு வீட்டு வசதி சங்கத் தலைவர் போந்தூர். எஸ்.செந்தில்ராஜன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

சுகாதாரத்துறை துணை இயக்குநர் வி.கே.பழனி வரவேற்றார். சிறு மருத்துவமனையைக் குத்து விளக்கேற்றித் திறந்து வைத்து தமிழக ஊரகத் தொழில்துறை அமைச்சர் பா.பென்ஜமின் பேசியது...

காஞ்சிபுரம் மாவட்டத்தில் 26 சிறு மருத்துவமனைகள் தொடங்க நடவடிக்கை எடுக்கப்பட்டு முதற்கட்டமாக 7 சிறு மருத்துவமனைகள் திறக்கப்பட்டுள்ளது. செலவில்லாமல் மருத்துவம் பார்க்க கிடைத்த வாய்ப்பு என்பதை விட இது ஒரு வரப்பிரசாதம் என்றே சொல்ல வேண்டும். கரோனா காலத்தில் மக்களின் நிலைமையை உணர்ந்து அவர்களைப் பாதுகாக்க இம்மருத்துவமனைகள் தொடங்கப்பட்டுள்ளது. எதிர்க்கட்சியை சேர்ந்தவர்கள் தனது கட்சிக்காரர்களிடம் பேசுவதற்குக் கூட ஆன்லைன் மூலமாகவே பேசிக்கொண்டிருக்கும் நிலையிலும் தமிழக முதல்வர் ஒவ்வொரு மாவட்டமாகச் சென்று மக்களின் குறைகளை கேட்டு அவற்றை தீர்த்துக் கொண்டு வருகிறார்.

காஞ்சிபுரம் மாவட்டத்தில் முதல் முதலாக குடிமராமத்துப்பணிகளை தொடங்கியதால் இன்று அனைத்து ஏரிகளும், குளங்களும் நிரம்பியிருக்கின்றன.சாதாரண ஏழை விவசாயக் குடும்பத்தைச் சேர்ந்தவராக முதல்வர் இருப்பதால் ஒருங்கிணைந்த காஞ்சிபுரம் மாவட்டத்தில் மட்டும் 7 தடுப்பணைகள் கட்டப்பட்டு அதில் 3 நிறைவு பெற்றுள்ளது. மற்ற 7 தடுப்பணைகளும் கட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாகவும் அமைச்சர் பா.பென்ஜமின் பேசினார்.

இதனையடுத்து காஞ்சிபுரம் மாவட்டத்தில் நாவலூர்,ஓரிக்கை ஆகிய இடங்களிலும் சிறு மருத்துவமனைகளைத் திறந்து வைத்தார்.பின்னர் ஆட்சியர் அலுவலக வளாகத்தில் நடந்த விழாவில் 449 பயனாளிகளுக்கு ரூ.1.83 கோடி மதிப்பிலான நலத்திட்ட உதவிகளையும் அமைச்சர் வழங்கினார்.

விழாவில் மாவட்ட வருவாய் அலுவலர் மா.நாராயணன், முன்னாள் எம்.பி.காஞ்சி.பன்னீர்செல்வம், முன்னாள் எம்.எல்.ஏ. மைதிலி திருநாவுக்கரசு,எறையூர் இ.பி.முனுசாமி ஆகியோர் உட்பட பலரும் கலந்து கொண்டனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.