

சேலம்: தமிழக சட்டப் பேரவைக்கு 2021-ல் தேர்தல் நடைபெற உள்ள நிலையில் தனது சொந்தத் தொகுதியான எடப்பாடியில் இன்று காலை தோ்தல் பிரசாரத்தை தொடங்கினார் முதல்வா் எடப்பாடி கே.பழனிசாமி.
நடைபெற உள்ள தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில், அதிமுக சார்பில் முதல்வர் வேட்பாளராக எடப்பாடி கே.பழனிசாமி சந்திக்கும் முதல் தேர்தல் என்பதால் நங்கவள்ளி ஊராட்சி ஒன்றியத்துக்கு உள்பட்ட பெரிய சோரகையில் உள்ள சென்றாயப் பெருமாள் ஆலயத்தில் இன்று பூஜை செய்து விட்டு முதல்கட்டமாக தனது சொந்தத் தொகுதியில் தோ்தல் பிரசாரத்தைத் தொடங்கினார்.
சென்றாயப் பெருமாள் கோயிலில், முதல்வர் பழனிசாமிக்கு பரிவட்டம் கட்டி மரியாதை செய்யப்பட்டது. கோயிலில் வழிபட்ட பின்னர் அங்கிருந்து முக்கியச் சாலையில் நடந்து சென்று முதல்வர் பழனிசாமி பிரசாரத்தைத் தொடங்கினார்.
முதல்வர் பழனிசாமியைக் காண சாலையின் இருபுறங்களிலும் ஏராளமான மக்கள் கூட்டம் திரண்டு நின்றிருந்தனர்.
2021 ஆம் ஆண்டுக்கான சட்டப்பேரவை தேர்தல் களம் தற்போது சூடுபிடிக்க தொடங்கியுள்ளது. இதன் அடிப்படையில் தமிழகம் முழுவதும் திமுக சார்பில் கடந்த மாதம் பிரசாரம் துவக்கப்பட்டது. திமுக இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் மற்றும் கனிமொழி ஆகியோர் விடியலைத்தேடி, ஸ்டாலின் குரல் என்ற தலைப்பில் பிரசாரத்தை துவக்கி தற்போது மாவட்ட வாரியாக பொதுமக்களையும் தொழிலதிபர்களை சந்தித்து வருகின்றனர்.
மேலும் மக்கள் நீதி மய்யக் கட்சியின் தலைவர் கமலஹாசன் கடந்த சில நாட்களுக்கு முன்பு பிரசாரத்தை துவக்கி உள்ளார்.
இதனால் அரசியல் களம் சூடு பிடித்துள்ளது. இந்த நிலையில் தமிழக முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமி தனது சொந்த தொகுதியான நங்கவள்ளி அருகே உள்ள பெரிய சோரகை கிராமத்தில் பிரசாரத்தை துவக்கினார்.
முன்னதாக பெரியசோரகை பகுதியில் உள்ள அருள்மிகு சென்றாயப்பெருமாள் தகோயில் சாமி தரிசனம் செய்துவிட்டு முறைப்படி பிரசாரத்தை துவக்கினார்.
இதற்காக அவருக்கு பிரத்யேக வாகனம் ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது. அந்த வாகனத்தில் பிரசாரத்தை துவக்கி உள்ளார்.
இதற்காக ஆயிரக்கணக்கான கட்சி தொண்டர்கள் அவரை வரவேற்கும் விதமாக வழிநெடுகிலும் தோரணம் கட்டி அதிமுக கொடிகளையும் பிளக்ஸ் பேனர்கள் மற்றும் கட் அவுட்களையும் அமைத்துள்ளனர்.
மேலும் நூற்றுக்கணக்கான பெண்கள் கையில் பூக்கள் நிறைந்த தாம்பூலத்துடன் அவரை வரவேற்றனர். அதிமுக சார்பில் முதன் முதலாக தமிழக முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமி தனது தேர்தல் பிரசாரத்தை துவக்கி உள்ளது, தமிழகம் முழுவதும் உள்ள அதிமுகவினருக்கு உற்சாகத்தை அளித்துள்ளது.
எடப்பாடி சட்டப்பேரவை தொகுதியை பொறுத்தவரை கடந்த காலங்களில் நடைபெற்ற தேர்தல்களில் 6 முறை அதிகமுக வெற்றி பெற்றுள்ளது. அதில் 4 முறை முதல்வர் பழனிசாமி வெற்றி பெற்றுள்ளார். 2016 பேரவைத் தேர்தலில் முதல்வர் பழனிசாமி சுமார் 99 ஆயிரம் வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார். இதனால் எடப்பாடி தொகு அதிமுகவின் கோட்டையாக பேசப்படுகிறது.
ஆனால் 2019 மக்களவைத் தேர்தலில் அதிமுக வேட்பாளர் சரவணன் தோல்வியை சந்தித்தார். முதல்வரின் சொந்தத் தொகுதியான எடப்பாடியிலும், சொந்த ஊரான சிலுவம்பாளையத்தில் அதிமுக வேட்பாளரை விட திமுக வேட்பாளர் பெற்ற வாக்குகள் அதிகம்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.