சேலத்தில் கடுமையான பனி மூட்டம் காரணமாக சென்னையில் இருந்து சேலம் வரும் விமானம் ஒன்றரை மணி நேரம் தாமதமாக வந்தடைந்த நிலையில், 5 நாள் பயணத்தை முடித்துக்கொண்டு சென்னைக்குப் புறப்பட்டார் முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமி.
ட்ருஜெட் நிறுவனம் சார்பில் நாள்தோறும் சென்னையிலிருந்து சேலத்திற்கு பயணிகள் விமான சேவை இயக்கப்பட்டு வருகிறது காலை 7.15 மணிக்கு சென்னையில் இருந்து புறப்படும் விமானம் 8.15 மணிக்கு சேலம் விமான நிலையம் வந்தடையும். மீண்டும் 8.30 மணிக்கு புறப்படும் விமானம் 9.30 மணிக்கு சென்னையை சென்றடையும்.
இந்நிலையில், சேலம் விமான நிலைய பகுதியில் நிலை வரும் கடும் பனிமூட்டம் காரணமாக சென்னையில் இருந்து சேலம் வரும் விமானம் வருவதில் தாமதம் ஏற்பட்டது. 8.15 மணிக்கு வரவேண்டிய விமானம் 1.30 மணி நேரம் தாமதமாக காலை 9.45 மணிக்கு சேலம் விமான நிலையத்தை வந்தடைந்தது.
கடந்த புதன்கிழமை சென்னையிலிருந்து சேலத்திற்கு 5 நாள் சுற்றுப்பயணமாக வந்த முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமி தனது சுற்றுப்பயணத்தை முடித்துக்கொண்டு ஞாயிற்றுக்கிழமை காலை 9.50 மணிக்கு சேலம் விமான நிலையத்திற்கு வந்தார். பின்னர் 10.10 மணிக்கு சேலத்திலிருந்து சென்னைக்கு பயணிகள் விமானம் முதல்வர் பழனிசாமி உடன் புறப்பட்டு சென்றது.
சேலம் மாவட்ட ஆட்சியர் ராமன், மாநிலங்களவை உறுப்பினர் சந்திரசேகரன், சட்டப்பேரவை உறுப்பினர்கள் செம்மலை, வெற்றிவேல் மற்றும் அதிமுக நிர்வாகிகள் முதல்வர் வழியனுப்பி வைத்தனர். முதல்வர் பயணிக்க இருந்த விமானம் மேகமூட்டம் காரணமாக தாமதமாக வந்தது விமான நிலைய பகுதியில் சற்று நேரம் பரபரப்பை ஏற்படுத்தியது.