நீடாமங்கலம் சந்தானராமர் கோவிலில் சொர்க்கவாசல் திறப்பு: திரளான பக்தர்கள் சாமி தரிசனம்
நீடாமங்கலம் சந்தானராமர் கோவிலில் வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு வெள்ளிக்கிழமை அதிகாலை சொர்க்கவாசல் திறக்கப்பட்டது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.


நீடாமங்கலம்: நீடாமங்கலம் சந்தானராமர் கோவிலில் வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு வெள்ளிக்கிழமை அதிகாலை சொர்க்கவாசல் திறக்கப்பட்டது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.
தஞ்சையை ஆட்சி புரிந்த மராட்டிய மன்னர் பிரதாபசிம்மரால் கி.பி.1761-இல் இக்கோவில் கட்டப்பட்டது. சங்கீத மும்மூர்த்திகளில் ஒருவரான முத்துசாமி தீட்சதரால் பாடல் பெற்றது. புத்திரபாக்கியம் இல்லாதவர்கள் சந்தானகோபால ஜெபம் செய்து சீதா, லட்சுமண, அனுமன் சமேத சந்தானராமரை மனமுருகி வேண்டினால் அப்பேற்றினை அடைவார்கள் என்பது ஐதீகம்.
வரலாற்றுச்சிறப்புமிக்க இக்கோவிலில் வருடம் தோறும் வைகுண்ட ஏகாதசி விழா வெகுசிறப்பாக நடைபெற்று வருகிறது. இவ்வாண்டும் வைகுண்ட ஏகாதசி விழாவை முன்னிட்டு திருஅத்யயன பகல்பத்து உற்சவம் கடந்த 15 ஆம் தேதி தொடங்கி 24 ஆம் தேதி வரை 10 நாள்கள் நடைபெற்றது.
இக்கோவிலில் வைகுண்ட ஏகாதசி விழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது. இதனை முன்னிட்டு சீதா,லட்சுமண, அனுமன் சமேத சந்தானராமர் ,வேதாந்த மகா தேசிகர் மற்றும் பரிவார தெய்வங்களுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் அலங்காரம் செய்யப்பட்டு மகாதீபாராதனை காட்டப்பட்டது. வேத விற்பன்னர்கள் வேத மந்திரங்களைச் சொல்லியும், நாலாயிர திவ்யபிரபந்தம் பாராயணம் செய்தும் சொர்க்கவாசல் திறக்கப்பட்டது. சீதா,லெட்சுமணர் சமேதராக சந்தானராமர் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்தார். இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
சிறப்பு அர்ச்சனைகளை செய்து வைத்து பக்தர்களுக்கு பிரசாதங்களை அர்ச்சகர் நாராயணன் வழங்கினார். வெள்ளிக்கிழமை இரவு ராபத்து உற்சவம் தொடங்கியது. விழா ஏற்பாடுகளை கோவில் செயல்அலுவலர் சிங்காரவடிவேலு, தக்கார் ரமேஷ், ஆய்வாளர் தமிழ்மணி மற்றும் திருக்கோவில் பணியாளர்கள் செய்திருந்தனர்.
ராபத்து உற்சவம் ஜனவரி 3 ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை நிறைவடைகிறது.
அபய வரதராஜப்பெருமாள்: இதேபோல் ஆலங்குடி அபய வரதராஜப்பெருமாள் கோவிலில் வைகுண்ட ஏகாதசி விழா நடைபெற்றது. சொர்க்கவாசல் திறப்பில் ஶ்ரீதேவி, பூமாதேவி சமேத அபய வரதராஜப் பெருமாள் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.
நீடாமங்கலம் லெட்சுமிநாராயணப்பெருமாள் கோவிலிலும் வைகுண்டஏகாதசி விழா நடைபெற்றது. இதிலும் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...