விபத்து அபாயம்: சாலைத் தடுப்புகளில் எச்சரிக்கை பிரதிபலிப்பு ஸ்டிக்கர் ஒட்டக் கோரிக்கை

கெங்கவல்லியில் புதியதாக அமைக்கப்பட்டுள்ள சாலைத் தடுப்புகளில் ஒளிபிரதிபலிப்பான் ஸ்டிக்கர்களை ஒட்ட போலீசாருக்கு பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
கெங்கவல்லியில் புதியதாக அமைக்கப்பட்டுள்ள சாலைத் தடுப்பு
கெங்கவல்லியில் புதியதாக அமைக்கப்பட்டுள்ள சாலைத் தடுப்பு
Updated on
1 min read

தம்மம்பட்டி: கெங்கவல்லியில் புதியதாக அமைக்கப்பட்டுள்ள சாலைத் தடுப்புகளில் ஒளிபிரதிபலிப்பான் ஸ்டிக்கர்களை ஒட்ட போலீசாருக்கு பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

கெங்கவல்லியிலிருந்து தம்மம்பட்டிக்கு செல்லும் வகையில் இலுப்பைத்தோப்பு பகுதியில் உள்ள எஸ் வடிவ வளைவு பகுதியில் கடந்த மாதம் தாறுமாறாக வந்த கல்பாரம் ஏற்றிவந்த லாரி, அப்பகுதியில் சாலையோரம் இருந்த குடிநீர் குழாயில் தண்ணீர் பிடித்துக்கொண்டிருந்த பத்து வயது சிறுமி மீது மோதியதில் அவர்,அதே இடத்தில் உயிரிழந்தார். 

இதனையடுத்து, அங்கு அதிவேகமாக கடக்கும் மண்,மணல் வாகனங்கள் மீது போலீசார் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தி நான்கு மணிநேரம் சாலைமறியல் செய்தனர். அதில், ஆத்தூர் டி.எஸ்.பி. இம்மானுவேல் ஞானசேகரன் நடத்திய பேச்சுவார்த்தையை அடுத்து மக்கள் கலைந்து சென்றனர். 

கெங்கவல்லியில் புதியதாக அமைக்கப்பட்டுள்ள சாலைத் தடுப்பு

அந்நிகழ்விற்கு அடுத்த நாளில், விபத்து நடந்த எஸ் வடிவ வளைவுப்பகுதியில் இருபுறமும் தலா 2 இரும்பு தடுப்புக்கட்டைகள் வீதம் நான்கு வைக்கப்பட்டன. இதன் மூலம் கடந்த ஒருமாதமாகவே, அப்பகுதியில் பகல்பொழுதில் செல்லும் அனைத்து வாகனங்களும் மிகவும் மெதுவாகவும்,பாதுகாப்பாகவும் கடந்து செல்கின்றன. இது வரவேற்கக்கூடியது என்றாலும், தடுப்புக்கட்டைகள் மீது உள்ள சிவப்பு பிரதிபலிப்பான் ஸ்டிக்கர்கள்,வாகன ஓட்டுநர்களை முழுமையாகக் கவனிக்க வைக்கும் அளவிற்கு ஒட்டப்படவில்லை. இது சாதாரண விசயமாக தெரிந்தாலும், இரவு 10 மணி முதல் அதிகாலை 4 மணி வரை அப்பகுதியை கடக்கும் ஓட்டுநர்களுக்கு அசாதாரண விசயமாக உள்ளது. இதனை சற்று கவனக்காவிட்டாலும், விபத்து ஏற்படும் அபாயம் உள்ளது.

எனவே, ஆத்தூர் டி.எஸ்.பி.யும், கெங்கவல்லி போலீசாரும் உடனடியாக உரிய நடவடிக்கை எடுத்து, கெங்கவல்லி இலுப்பைத்தோப்பு பகுதியில் வைக்கப்பட்டுள்ள இரும்பு பேரிகார்டுகளில் முழுமையாக ஓட்டுநர்களுக்கு தெரியும் வகையில் சிவப்பு பிரதிபலிப்பான் ஸ்டிக்கர்களை நன்கு ஒட்டிட வேண்டும் என்பது அப்பகுதியில் செல்லும் இரு மற்றும் நான்கு சக்கர வாகன ஓட்டுநர்களின் கோரிக்கையாக உள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com