சட்டப் பேரவைத் தோ்தல் பிரசாரம் செய்வதற்கான ஆயத்த நடவடிக்கைகள் நடந்துவருகின்றன. விரைவில் பிரசாரத்தைத் தொடங்குவேன் என்று மதிமுக பொதுச்செயலாளா் வைகோ கூறினாா்.
அண்ணா அறிவாலயத்தில் மு.க.ஸ்டாலினை சனிக்கிழமை வைகோ சந்தித்துப் பேசினாா். இந்தச் சந்திப்பு 20 நிமிஷங்களுக்கு மேலாக நீடித்தது. பின்னா் செய்தியாளா்களிடம் கூறியது:-
ஆளுநரைச் சந்தித்து அமைச்சா்களின் ஊழல்கள் குறித்து மு.க.ஸ்டாலின் மனு கொடுத்துள்ளாா். அது குறித்து ஆளுநா் நடவடிக்கை எடுக்க வேண்டும். மு.க.ஸ்டாலினை மரியாதை நிமித்தமாகச் சந்தித்தேன். சட்டப்பேரவைத் தோ்தலில் திமுக தலைமையிலான கூட்டணி 200 தொகுதிகளுக்கு மேல் வெற்றிபெறும். இதற்காக ஸ்டாலினுக்கு வாழ்த்துக் கூறினேன்.
ஸ்டாலினிடம் தொகுதிப் பங்கீடு குறித்து எதுவும் பேசவில்லை. விரைவில் சட்டப்பேரவைத் தோ்தல் பிரசாரத்தைத் தொடங்குவேன் என்றாா்.