

எம்ஜிஆர், ஜெயலலிதா உயிரோடு இருந்திருந்தால் யார் முதல்வர் வேட்பாளர் என்பதை நாங்கள் தான் அறிவிப்போம் என பாஜக கூறுமா? என தமிழ்நாடு காங்கிரஸ் முன்னாள் தலைவர் சு. திருநாவுக்கரசர் எம்பி கேள்வி எழுப்பினார்.
புதுக்கோட்டையில் திங்கள்கிழமை நடைபெற்ற காங்கிரஸ் கட்சியின் 136ஆவது தொடக்க விழாவில் காந்தி பூங்காவிலுள்ள காந்தியடிகளின் சிலைக்கு மாலை அணிவித்த அவர் செய்தியாளர்களிடம் கூறியது:
அதிமுகவின் முதல்வர் வேட்பாளர் யார் என்பதை பாஜகவின் தேசியத் தலைமை தான் அறிவிக்கும் என்று அக்கட்சியினர் கூறுவது சர்வாதிகாரம்; அராஜகம்.
தன்மானம் உள்ள தலைவர்கள் இதனை ஏற்க மாட்டார்கள். எம்ஜிஆரோ ஜெயலலிதாவோ உயிரோடு இருந்தால் இப்படிக் கூறுவார்களா?
திருவள்ளுவர் சாதி, மதங்களுக்கு அப்பார்ப்பட்டவர். உலகப் பொதுமறையைத் தந்தவர். அவரது படத்துக்கும் சிலைக்கும் காவி வண்ணம் அடிப்பது அநாகரீகமானது.
திமுகவின் கிராம சபைக் கூட்டங்களுக்குத் தடை விதிக்க தமிழக அரசு முயற்சிப்பது தவறு. அதிமுகவுக்கு தைரியம் இருந்தால் கிராம சபைக் கூட்டங்களை அதிமுக நடத்தித் தேர்தலைச் சந்திப்பார்களா? எனக் கேள்வி எழுப்பினார் திருநாவுக்கரசர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.