அருப்புக்கோட்டை: விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டை நகர் மற்றும் சுற்றுவட்ட கிராமங்களில் அரசு சிறு மருத்துவமனைகளை தமிழக பால்வளத்துறை அமைச்சர் கே.டி.ராஜேந்திரபாலாஜி செவ்வாய்க்கிழமை இரவு திறந்து வைத்தார்.
தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி தமிழகமெங்கும் சுமார் 2000 அரசு சிறு மருத்துவமனைகள் விரைவில் தொடங்கப்படும் என அறிவித்திருந்தார். இதன்படி அதற்கான பணிகள் மேற்கொள்ளப்பட்டு தயாராயின.
இந்நிலையில், செவ்வாய்க்கிழமை இரவு அருப்புக்கோட்டை சுற்றுவட்ட கிராமங்களான குருந்தமடம் மற்றும் செட்டிக்குறிச்சி ஆகிய கிராமங்களுக்குச் சென்று அரசு சிறு மருத்துவமனைகளை அமைச்சர் ராஜேந்திரபாலாஜி தலைமை வகித்துத் தொடக்கி வைத்தார்.
விருதுநகர் கிழக்கு மாவட்டச்செயலாளர் ரவிச்சந்திரன்,அருப்புக்கோட்டை நகரச்செயலாளர் எம்.எம்.சக்தி பாண்டியன்,முன்னாள் ஒன்றியக் குழுத் தலைவர் எஸ்.ஒய்.வாசுதேவன்,கிழக்கு மாவட்ட தகவல் தொழில்நுட்பச் செயலாளர் கருப்பசாமி,ஒன்றியச்செயலாளர் சங்கரலிங்கம் வீரசுப்பிரமணியன்,பம்பாய் மணி,அரசு அதிகாரிகள் உள்ளிட்டோர் முன்னிலை வகித்தனர்.
அருப்புக்கோட்டை நகரிலுள்ள காந்தி மைதானம் அருகே அமைக்கப்பட்ட அரசு சிறு மருத்துவமனை திறப்புவிழாவில் இரவு 9 மணிக்குக் கலந்து கொண்ட அமைச்சர் ராஜேந்திரபாலாஜி நிகழ்ச்சிக்குத் தலைமை வகித்து குத்துவிளக்கேற்றி பொதுமக்கள் பயன்பாட்டிற்குத் திறந்து வைத்தார்.
அப்போது அவர் முன்னாள் முதல்வர் ஜெயலலிதா கொண்டு வந்த அனைத்து சிறப்பு நலத்திட்டங்களையும் செவ்வனே நிறைவேற்றிய முதல்வர் எடப்பாடி பழனிசாமி அது மட்டுமல்லாது தமிழகத்தில் அரசுப்பள்ளி மாணவர்களுக்கு இட ஒதுக்கீட்டிற்கு ஆவண செய்து பெற்றுத் தந்ததுடன்,அவர்களில் ஏழை மாணவர்களின் படிப்பிற்கு அரசே கல்விக்கட்டணம் செலுத்தவும் ஏற்பாடு செய்தார்.எனவே தமிழகத்தில் மீண்டும் நல்லாட்சி தொடர,நன்றி மறவாமல் அதிமுகவுக்கு வாக்களியுங்கள்,என அவர் பேசினார்.
திருச்சுழி:
இதேபோல திருச்சுழி வட்டம் வெள்ளையாபுரம் கிராமத்திலும் செவ்வாய்க்கிழமை இரவு அமைச்சர் கே.டி.ராஜேந்திரபாலாஜி தலைமை வகித்து குத்துவிளக்கேற்றி அரசு சிறு மருத்துவமனையை பொதுமக்கள் பயன்பாட்டிற்குத் திறந்து வைத்தார்.உடன் திருச்சுழி நகர,ஓன்றிய அதிமுக நிர்வாகிகளும், தொண்டர்களும், பொதுமக்களும் திரளாகக் கலந்து கொண்டனர்.