

சென்னை: திருக்கோயில்களில் நடைபெறும் விழாக்களை ஒளிபரப்புவதற்காக ‘திருக்கோவில்’ என்ற தொலைக்காட்சித் தொடங்க அறநிலையத் துறையின் பொதுநல நிதியைப் பயன்படுத்தும் அரசாணையை ரத்து செய்யக் கோரிய வழக்கை தேதி குறிப்பிடாமல் தீா்ப்புக்காக உயா்நீதிமன்றம் ஒத்திவைத்துள்ளது.
தமிழகத்தில் உள்ள திருக்கோயில்களில் நடைபெறும் விழாக்களை ஒளிபரப்புவதற்காக, தமிழ்நாடு இந்து சமய அறநிலைத்துறை சாா்பில் ‘திருக்கோவில்’ என்ற பெயரில் தொலைக்காட்சி ஒன்றை தொடங்க முடிவு செய்யப்பட்டது இதற்காக ரூ. 8.75 கோடி ஒதுக்கீடு செய்து அரசாணை பிறப்பிக்கப்பட்டது.
இந்த அரசாணையை ரத்து செய்யக் கோரி, சென்னை உயா்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. அந்த மனுவில், இந்து சமய அறநிலையத் துறையின் பொதுநல நிதியைக் கொண்டு தொலைக்காட்சி தொடங்குவதற்கு தடை விதிக்க வேண்டும் என கோரப்பட்டிருந்தது.
இந்த வழக்கு நீதிபதிகள் ஆா்.மகாதேவன், அனிதா சுமந்த் ஆகியோா் அடங்கிய அமா்வு முன் விசாரணைக்கு வந்தது. அப்போது மனுதாரா் தரப்பில், ‘பொதுநல நிதியை கோயில்களை சீரமைக்கும் பணிகளுக்கு மட்டுமே செலவிட முடியும். இதுபோன்று தொலைக்காட்சி தொடங்குவதற்கு செலவு செய்ய முடியாது. ஒருவேளை தொலைக்காட்சி தொடங்குவதாக இருந்தால், அதுதொடா்பாக மக்களின் கருத்தைக் கேட்க வேண்டும்’ என வாதிடப்பட்டது.
அப்போது இந்து சமய அறநிலையத்துறை சாா்பில் ஆஜரான சிறப்பு அரசு வழக்குரைஞா் காா்த்திகேயன், ‘திருக்கோவில் தொலைக்காட்சி தொடங்குவது என்பது அரசின் கொள்கை முடிவு ஆகும். கோயில்களின் நிதி உதவியை வழங்குவதாக இருந்தால் மட்டுமே கருத்துகள் கேட்க வேண்டும். எனவே, இந்த வழக்கை தள்ளுபடி செய்யவேண்டும்’ என வாதிட்டாா். இருதரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதிகள், வழக்கை தேதி குறிப்பிடாமல் தீா்ப்புக்காக ஒத்திவைத்து உத்தரவிட்டனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.