காவிரி டெல்டா பகுதி பாதுகாக்கப்பட்ட சிறப்பு வேளாண் மண்டலமாக அறிவிக்கப்பட்டதற்கு பாமக நிறுவனர் ராமதாஸ் வரவேற்பு அளித்துள்ளார்.
சேலம் மாவட்டம், தலைவாசலில் சர்வதேச கால்நடை ஆராய்ச்சி பூங்கா மற்றும் கால்நடை மருத்துவக் கல்லூரிக்கு, முதல்வர் எடப்பாடி பழனிசாமி இன்று அடிக்கல் நாட்டினார். அப்போது விழாவில் பேசிய அவர், காவிரி டெல்டா பகுதி பாதுகாக்கப்பட்ட சிறப்பு வேளாண் மண்டலமாக மாற்றப்படும் என்றும் இதற்காக சட்ட வல்லுநர்கள் ஆலோசித்து தனிச்சட்டம் இயற்றப்படும் என்றும் முதல்வர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார்.
இதற்கு பாட்டாளி மக்கள் கட்சியின் நிறுவனர் ராமதாஸ் வரவேற்பு தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் தனது ட்விட்டர் பக்கத்தில், 'காவிரி பாசன மாவட்டங்களை பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி அறிவித்திருப்பது மகிழ்ச்சியளிக்கிறது. பாமகவின் 10 அம்சக் கோரிக்கைகளில் முதன்மையானதை நிறைவேற்றிய முதல்வருக்கு நன்றியும், பாராட்டுகளும்!' என்று பதிவிட்டுள்ளார்.