கும்பகோணம் அருகே வழி தவறி கிராமத்துக்குள் புகுந்த புள்ளிமானை பொதுமக்கள் பிடித்து வனத் துறையினரிடம் வெள்ளிக்கிழமை ஒப்படைத்தனர்.
கும்பகோணம் அருகே கொள்ளிடம் ஆற்றின் கரையோரம் உள்ள காவற்கூடம் கிராமத்துக்குள் வியாழக்கிழமை மாலை நான்கு வயது உடைய பெண் புள்ளிமான் வந்தது. இதை தெரு நாய்கள் விரட்டி வந்தது. இதனால், அங்கிருந்த பொதுமக்கள் புள்ளிமானை பிடித்து, ஒரு வீட்டில் கயிற்றால் கட்டி, பாதுகாப்பாக வைத்தனர்.
தகவலறிந்த வனத்துறையினர் காவற்கூடம் கிராமத்துக்குச் சென்று புள்ளிமானை மீட்டு அருகிலுள்ள அரியலூர் மாவட்ட கொள்ளிடக் கரையோர காப்புகாட்டில் விட்டனர்.
கொள்ளிடம் ஆற்றின் கரையில் உள்ள காப்புக்காட்டில் மான்கள் கணிசமான அளவில் உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.