வத்தலக்குண்டு அருகே எல்ஐசி முகவர் மனைவியுடன் தற்கொலை செய்துகொண்டு சம்பவம் அந்தப் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
திண்டுக்கல் மாவட்டம், கொடைக்கானல் மலை பண்ணைக்காடு கிராமத்தைச் சேர்ந்தவர் மகுடீஸ்வரன்(58). கடந்த 25 ஆண்டுகளாக எல்ஐசி முகவராக பணியாற்றி வந்தார். இவரது மனைவி சிவகாமி சுந்தரி (56). கடந்த 20 ஆண்டுகளாக வத்தலக்குண்டு பில்டிங் சொசைட்டி தெருவில் வசித்து வந்தனர். தனது ஒரே மகளை திருமணம் செய்து கொடுத்துவிட்டனர்.
இந்நிலையில் இன்று வீட்டின் முகப்பு அறையில் மகுடீஸ்வரன் மற்றும் அவரது மனைவி சிவகாமி சுந்தரி இருவரும் பிணமாகக் கிடந்தனர். மற்றொரு அறையிலிருந்த அவரது மகள் காயத்ரி தனது தாய் தந்தையர்கள் பிணமாகக் கிடப்பதைக் கண்டு அதிர்ச்சி அடைந்தார்.
இதுகுறித்து வத்தலக்குண்டு காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடத்திற்குச் சென்ற காவல் ஆய்வாளர் பிச்சைபாண்டி தலைமையிலான காவல்துறை இருவரின் சடலங்களையும் மீட்டு விசாரணை நடத்தினர். முதல் கட்ட விசாரணையில் இருவரும் தூக்க மாத்திரை சாப்பிட்டு தற்கொலை செய்துகொண்டிருப்பது தெரியவந்தது. மகுடீஸ்வரன் குடும்ப பிரச்னை காரணமாக மன உளைச்சலில் இருந்ததாக கூறப்படுகிறது. இச்சம்பவம் குறித்து காவல்துறை மேலும் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.