சென்னை: பொதுமக்கள் காணொலி காட்சி மூலமாக புகாரளிக்கும் வசதி ஏற்படுத்தப்படும் என்று சென்னை காவல் ஆணையராக பொறுப்பேற்றிருக்கும் மகேஷ்குமார் அகர்வால் தெரிவித்துள்ளார்.
சென்னை காவல் ஆணையராக நியமிக்கப்பட்ட மகேஷ்குமார் அகர்வால் இன்று தனது பொறுப்பை ஏற்றுக் கொண்டார்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய புதிய காவல் ஆணையர் மகேஷ்குமார் அகர்வால், சென்னை மாநகர மக்களுக்கு பல்வேறு சேவைகளைச் செய்ய விரும்புகிறேன்.
கரோனா பரவும் அபாயம் இருப்பதால் பொதுமக்கள் தேவையின்றி வெளியே வர வேண்டாம். அவசியம் ஏற்படும் போது வெளியே வந்தாலும் முகக்கவசம் அணிந்து வர வேண்டும். சமூக இடைவெளியைக் கடைப்பிடிக்க வேண்டும் என்றும் மகேஷ்குமார் அகர்வால் வலியுறுத்தினார்.
மேலும், கரோனா அச்சம் காரணமாக பொதுமக்கள் வெளியே வருவதைத் தடுக்கும் வகையில் செல்லிடப்பேசியில் காணொலி வாயிலாகவே பொதுமக்கள் புகார் அளிக்கும் வசதி ஏற்படுத்தப்படும். இந்த திட்டம் நாள்தோறும் அல்லது வாரத்தில் ஒரு குறிப்பிட்ட நாள், குறிப்பிட்ட நேரத்தில் என்னிடம் நேரடியாகவே புகார் அளிக்கும் வகையில் வசதி ஏற்படுத்தப்படும் என்று சென்னை மாநகர காவல் ஆணையர் மகேஷ்குமார் அகர்வால் தெரிவித்துள்ளார்.