திருச்சி மாவட்டம் மணப்பாறை அடுத்த துவரங்குறிச்சி காவல்நிலையத்திற்கு அருகே உள்ள மருத்துவமனைத்தெருவின் கடைசி பகுதியில் கைக் குழந்தை ஒன்று முட்புதரில் கிடப்பதாக காவல்துறையினருக்கு தகவல் கிடைத்துள்ளது. தகவலையடுத்து காவல் ஆய்வாளர் ஜெயதேவி தலைமையிலான காவலர்கள் நிகழ்விடத்திற்கு சென்று பார்த்தபோது அங்கு முட்செடிகளுக்கு நடுவே பிறந்து சுமார் 10 மாதங்களான பெண் குழந்தை கிடந்துள்ளது. உயிருடன் நல்ல நிலையில் இருந்த அந்தக் குழந்தையை மீட்ட காவல்துறையினர், துவரங்குறிச்சி அரசு மருத்துவமனையில் முதலுதவி அளித்து பின், மணப்பாறை மாவட்ட தலைமை அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு குழந்தை நலம் குறித்து குழந்தைகள் நல மருத்துவர்கள் பரிசோதனைகள் செய்த பின் குழந்தை திருச்சி சைல்டு லைன் குழு உறுப்பினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது.