மத்தியப் பிரதேச மாநிலத்தில் உடற்பயிற்சிக் கூடங்களை திறக்க வேண்டும் என்று உடற்பயிற்சியாளர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
நாடு முழுவதும் கரோனா வைரஸ் தொற்று தீவிரம் காரணமாக பெரும்பாலான மாநிலங்களில் ஊரடங்கு நீட்டிக்கப்பட்டு வருகிறது. அத்தியாவசியத் தேவைகளுக்கு மட்டுமே தளர்வுகள் அறிவிக்கப்பட்டுள்ளன.
இந்த நிலையில் மத்தியப் பிரதேச மாநிலத்தில் ஜபல்பூர் பகுதியில் உடற்பயிற்சிக் கூடங்களை திறக்க வேண்டும் என்று உடற்பயிற்சியாளர்கள் பலர் போராட்டத்தில் ஈடுபட்டனர். மாநிலம் முழுவதும் உள்ள உடற்பயிற்சிக் கூடங்களைத் திறக்க அரசுக்கு வலியுறுத்தி அவர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
இதுகுறித்து ஜபல்பூரில் உடற்பயிற்சி சங்கத்தின் செயலாளர் சச்சின் யாதவ் கூறுகையில், கடந்த நான்கு மாதங்களாக உடற்பயிற்சிக் கூடங்கள் அனைத்தும் மூடப்பட்டுள்ளது.
இதனால் உரிமையாளர்களுக்கும், பயிற்சியாளர்களும் பொருளாதார ரீதியாக கடினமான சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. பெரும்பாலான உடற்பயிற்சிக் கூடங்கள் வாடகை கட்டிடத்தில் இயங்குவதால் மாதாந்திர வாடகை தொகையை செலுத்துவது மிகவும் கடினமாக உள்ளது.
உடற்பயிற்சிக் கூடங்கள் செயல்படாத நிலையில்கூட மாதம் 20 ஆயிரம் ரூபாய் முதல் 2 லட்சம் ரூபாய் வரை வாடகை செலுத்த நேரிடுகிறது. மேலும், மின்சாரக் கட்டணங்கள் உள்ளிட்ட இதர செலவுகளும் உள்ளன. எனவே, தற்போதைய நிதி நெருக்கடியை சமாளிக்க உடற்பயிற்சிக் கூடங்கள் அனைத்தும் திறக்கப்பட வேண்டும்' என்றார்.