2026ஆம் ஆண்டுக்கான ஆஸ்கர் விருதுகள்! வெற்றியாளர்கள் முழு விவரம்!! தங்கம், வெள்ளி விலை மீண்டும் குறைவுமீண்டும் சென்னை திரும்பிய துபை விமானம் மேற்கு வங்கத்தில் தலைமைச்செயலாளர் மாற்றம்! கட்டாக் மருத்துவமனையில் பயங்கர தீ விபத்து: 10 நோயாளிகள் பலி சென்னை மாதவரத்தில் என்கவுன்டரில் ரௌடி சுட்டுக்கொலை! ஆஸ்கர் விருது விழா கோலாகலம்!
/

பல்கலைக்கழக, கல்லூரி இறுதிப் பருவத் தேர்வு ; தமிழக அரசு பதிலளிக்க உயர்நீதிமன்றம் ஆணை

தமிழகத்தில் உள்ள பல்கலைக்கழகங்கள் மற்றும் கல்லூரிகளில் இறுதி பருவ தேர்வுகளை நடத்த தடை விதிக்க கோரி தொடர்ந்த வழக்கில் இரண்டு வாரத்தில் பதிலளிக்க தமிழக அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது

News image
High Court postponed university exam case
Updated On :21 ஜூலை 2020, 10:46 am

DIN

தமிழகத்தில் உள்ள பல்கலைக்கழகங்கள் மற்றும் கல்லூரிகளில் இறுதி பருவ தேர்வுகளை நடத்த தடை விதிக்க கோரி தொடர்ந்த வழக்கில் இரண்டு வாரத்தில் தமிழக அரசு பதில் அளிக்க சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

நாடு முழுவதும் கரோனா தொற்று பரவியதைத் தொடர்ந்து கடந்த மார்ச் 25ஆம் தேதி முதல் பல்கலைக்கழகங்கள் மற்றும் கல்லூரிகள் மூடப்பட்டன. இதனால் வழக்கமான வகுப்புகள் முதல் தேர்வுகள் வரை அனைத்தும் பாதிக்கப்பட்டன. 

இதையடுத்து பல்கலைக்கழக மானியக் குழுவால் அமைக்கப்பட்ட பேராசிரியர் குஹத் தலைமையிலான நிபுணர் குழு ஜூலை மாதம் தேர்வுகளை நடத்தலாம் என கடந்த ஏப்ரலில் பரிந்துரை செய்தது.

ஆனால், தொற்று தீவிரம் காரணமாக, தேர்வு நடத்துவது குறித்து மறு ஆய்வு செய்து பரிந்துரை வழங்க பல்கலைக்கழக மானியக் குழு கேட்டுக் கொண்டது.

இதனடிப்படையில் அந்தக் குழு சமர்ப்பித்த திருத்தியமைக்கப்பட்ட பரிந்துரையின் அடிப்படையில், கல்லூரி இறுதியாண்டு மாணவர்களுக்கு மட்டும் இறுதி பருவத் தேர்வுகளை செப்டம்பர் மாதம் நடத்தி முடிக்க, பல்கலைக்கழக மானியக் குழு கடந்த ஜூலை 6ம் தேதி அறிவிப்பு வெளியிட்டது.

இதனை எதிர்த்து கோவையைச் சேர்ந்த முதுகலை மாணவர் அம்ஜத் அலிகான், சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.

அவரின் மனுவில்,”கடந்த நான்கு மாதங்களாக கல்லூரிகள் செயல்படாத நிலையில் தேர்வு நடத்தினால்  மாணவர்கள் பாதிக்கப்படுவர்” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், தற்போது கல்லூரிகள், கரோனா பரிசோதனை மையங்களாகவும், தனிமைப்படுத்தும் மையங்களாகவும் மாற்றப்பட்டுள்ளதால் அங்கு தேர்வு நடத்தினால் மாணவர்களின் உயிருக்கு ஆபத்து ஏற்படும் என குறிப்பிட்டுள்ளார்.

இந்த வழக்கு நீதிபதிகள் எம்.எம்.சுந்தரேஷ் மற்றும் ஹேமலதா அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதிகள் ஏற்கனவே இதுபோன்ற வழக்கு நிலுவையில் உள்ளதால் அந்த வழக்கோடு சேர்த்து விசாரிப்பதாக உத்தரவிட்டு வழக்கு விசாரணையை 2 வார காலத்திற்கு ஒத்தி வைத்தனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.