
மேட்டுப்பாளையம் வனச்சரகத்தில் காட்டு யானைகளுக்குள் ஏற்பட்ட சண்டையில் உடல்நிலை பாதித்த ஆண் காட்டு யானை ஒன்று வெள்ளிக்கிழமை உயிரிழந்தது.
மேட்டுப்பாளையம் வனச்சரகத்தில் நெல்லிமலை காப்புகாட்டில் உடல் நிலை பாதித்து சோர்வான நிலையில் காட்டு யானை ஒன்று உணவு உண்ண முடியாமல் நடமாடி வந்ததாக வனத்துறையினருக்கு தகவல் கிடைத்தது.
இதையடுத்து மேட்டுப்பாளையம் வனத்துறையினர் நெல்லிமலை காப்புக்காடு வனப்பகுதியில் கடந்த புதன், வியாழன் ஆகிய இரு தினங்கள் உடல்நிலை பாதித்த யானையை தேடும் பணியில் ஈடுபட்டனர். அப்போது நெல்லு மலை காப்புக்காடு வனப்பகுதியில் இருந்து அரை கிலோமீட்டர் தொலைவில் படுத்த நிலையில் ஆண் காட்டு யானை ஒன்று உயிருக்கு போராடிக் கொண்டிருந்தது. அப்போது அந்த யானையை பரிசோதித்த மருத்துவர்கள், யானையின் மேல் இடது தாடையின் கடவாய் பற்களுக்கு முன்னால் 20 செ.மீ ஆழம் மற்றும் 9 செ.மீ விட்டம் அளவிலான ஆழமான காயம் இருப்பது கண்டறியப்பட்டது. காயத்தின் விளிம்புகள் மென்மையாக இருந்தது.
எனவே இந்த காயம் மற்றொரு ஆண் யானையுடன் ஏற்பட்ட சண்டையில் ஏற்பட்டிருக்கலாம். காயத்தின் வயது சீழ் உருவாக்கம் மற்றும் புழுக்களின் இருப்பு ஆகியவற்றிலிருந்து பார்க்கும் போது 7 முதல்10 நாள்கள் வரை இருக்கலாம். யானை குறைந்தபட்சம் 8 முதல்10 நாட்கள் பட்டினி இருந்திருக்கும். இந்த ஆண் யானையின் வயது 9 முதல் 11 வரை இருக்கலாம் என தெரிவித்த மருத்துவர்கள், யானைக்கு 32 பாட்டில்கள் குளுகோஸ் ஏற்றி தொடர்ந்து சிகிச்சை அளித்து வந்தனர்.
இந்நிலையில், சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த ஆண் யானை சிகிச்சை பலனின்றி வெள்ளிக்கிழமை அதிகாலை இறந்துவிட்டது. யானையின் உடலை உடற்கூர் ஆய்வு செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.