சென்னை: கரோனா சிகிச்சை பெற்று குணமடைந்து பணிக்கு திரும்பிய, கூடுதல் ஆணையாளர் மற்றும் 49 காவல்துறையினருக்கு சென்னை பெருநகர காவல் ஆணையாளர் ஏ.கே. விஸ்வநாதன் வாழ்த்து தெரிவித்து பாராட்டுச் சான்றிதழ்களை வழங்கினார்.
சென்னை பெருநகர காவல், கூடுதல் காவல் ஆணையாளர் (வடக்கு) மற்றும் 49 காவலர்கள் ( 2 உதவி ஆணையாளர்கள், 4 ஆய்வாளர்கள், 12 உதவி ஆய்வாளர்கள், 31 காவலர்கள்) கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு, மருத்துவமனையில் சிகிச்சை பெற்று குணமடைந்து வீடு திரும்பினர்.
பின்னர் பூரண குணமடைந்து மருத்துவர்கள் அறிவுரைப்படி இன்று (01.6.2020) பணிக்கு திரும்பிய கூடுதல் காவல் ஆணையாளர் (வடக்கு) தினகரனை சென்னை பெருநகர காவல் ஆணையாளர் முனைவர் ஏ.கே. விஸ்வநாதன் வேப்பேரி காவல் ஆணையாளர் அலுவலக வளாகத்தில் சந்தித்து உடல் நலம் குறித்து கேட்டறிந்து பாராட்டு சான்றிதழ்களை வழங்கி வாழ்த்து தெரிவித்தார்.
மேலும், கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு, இன்று பணிக்குத் திரும்பிய 49 காவலர்களுக்கும் சென்னை பெருநகர காவல் ஆணையாளர் பாராட்டு சான்றிதழ்களை வழங்கி வாழ்த்துகளை தெரிவித்தார். பின்னர் அனைத்து போலீசாருக்கும் கபவாத சூப் வழங்கினார்.