கோவை இ.எஸ்.ஐ. மருத்துவமனையில் கரோனா சிகிச்சைக்காக மேலும் 400 படுக்கை வசதிகள் ஏற்படுத்துவதற்கான சாத்தியக்கூறுகள் குறித்து ஆய்வு செய்யப்பட்டுள்ளது என்று சுகாதாரத் துறை அமைச்சர் சி.விஜயபாஸ்கர் தெரிவித்தார்.
கோவை இ.எஸ்.ஐ. மருத்துவமனையில் கரோனா சிகிச்சை குறித்து சுகாதாரத் துறை அமைச்சர் சி. விஜயபாஸ்கர் மற்றும் உள்ளாட்சித் துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி வியாழக்கிழமை ஆய்வு செய்தனர்.
பின் சுகாதாரத் துறை அமைச்சர் சி.விஜயபாஸ்கர் செய்தியாளர்களிடம் கூறியதாவது:
கோவை இ.எஸ்.ஐ. மருத்துவமனையில் ஆரம்பம் முதலே கரோனாவுக்கு சிறப்பாக சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. கரோனாவுக்காக 400 படுக்கைகள் ஏற்படுத்தப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இந்நிலையில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மேலும் 400 படுக்கை வசதிகள் ஏற்படுத்தத் திட்டமிடப்பட்டுள்ளது. இதற்கான சாத்தியக்கூறுகள் குறித்து ஆய்வு செய்யப்பட்டுள்ளது. இது தொடர்பாக பொதுப்பணித் துறை அதிகாரிகளுடன் ஆலோசனை செய்யப்பட்டுள்ளது என்றார்.