புதுச்சேரி: புதுவை எல்லைகள் புதன்கிழமை (ஜன.17) முதல் முழுமையாக மூடப்படும் என்று புதுவை முதல்வர் வே. நாராயணசாமி அறிவித்துள்ளார்.
கரோனா தொற்று நடவடிக்கை தொடர்பாக பிரதமர் மோடி, மாநில முதல்வர்களுடன் காணொளி காட்சியில் செவ்வாய்க்கிழமை உரையாடினார். புதுவைப் பேரவையில் இருந்து முதல்வர் வே. நாராயணசாமியும் இந்த உரையாடலில் பங்கேற்றார்.
இக்கூட்டத்துக்குப் பின்னர் முதல்வர் நாராயணசாமி செய்தியாளர்களிடம் கூறியதாவது:
கரோனா தொற்று நடவடிக்கை தொடர்பாக பிரதமர் மோடி பேசும்போது, அமெரிக்கா போன்ற அதிக பாதிப்புள்ள நாடுகளுடன் ஒப்பிடும்போது இந்தியாவில் கரோனா பாதிப்பு மிகவும் குறைவு. மேலும், இந்த தொற்றால் ஏற்படும் இறப்பு விகிதமும் மிகவும் குறைவு. மாநில எல்லைகளை மூடாமல் இருந்திருந்தால் குறைந்தபட்சம் 75 லட்சம் பேர் பாதிக்கப்பட்டிருப்பார்கள். இறப்பு எண்ணிக்கையும் சில லட்சத்தை தாண்டியிருக்கும் என்றார்.
மேலும், பிரதமர் பேசும்போது, இந்திய நாட்டை பொருத்தவரை மக்களின் உயிர், இந்திய பொருளாதாரம் ஆகிய இரண்டையும் கவனிக்க வேண்டும். விவசாயம், தொழில் ஆகிய இரண்டிலும் கவனம் செலுத்தி வருகிறோம். இதன் மூலம் உற்பத்தியும், வேலைவாய்ப்பும் படிப்படியாக அதிகரித்து வருகிறது. மேலும் மின் உற்பத்தியும் அதிகரித்துள்ளது.
கரோனா தடுப்பு நடவடிக்கையில் ஆளும் கட்சி மாநிலங்களாக இருந்தாலும், எதிர்கட்சிகள் ஆளும் மாநிலங்களாக இருந்தாலும் வேற்றுமையில் ஒற்றுமையுடன் இணைந்து செயல்படுவதால் கரோனாவை வெற்றிகரமாக கட்டுப்படுத்தி வருகிறோம். கரோனா பரிசோதனைகளை அதிகப்படுத்த வேண்டும். தொற்றால் பாதிக்கப்பட்டவர்களுக்கு முறையான சிகிச்சை அளிக்க வேண்டும் என்றார்.
இக்கூட்டத்தில் பஞ்சாப் உள்ளிட்ட மாநில முதல்வர்கள் பேசும்போது, கரோனா தொற்று ஏற்பட்டப்பின்னர் மாநிலங்களுக்கு வருவாய் இழப்பு ஏற்பட்டுள்ளது. நிதி நெருக்கடியில் சிக்கியிருக்கும் மாநிலங்களுக்கு மத்திய அரசு தாராளமாக நிதி வழங்க வேண்டும். வென்டிலேட்டர், முகக்கவசங்கள் உள்ளிட்ட மருத்துவ உபகரணங்கள் வாங்க தாராளமாக நிதி வழங்க வேண்டும் என வலியுறுத்தினர்.
இதற்கு பிரதமர் மோடி பதில் அளிக்கும்போது, நிதி தேவை தொடர்பாக தனித்தனியாக கடிதம் எழுதும்படி அறிவுறுத்தினார். புதுவைக்கு கூடுதல் நிதி ஆதாரம் தேவை என வலியுறுத்தி பிரதமர் மோடிக்கு ஏற்கெனவே கடிதம் எழுதப்பட்டுள்ளது. கூடுதல் நிதியை மத்திய அரசு தரும் என்ற நம்பிக்கை உள்ளது.
புதுவையில் உள்ளூர் மக்களால் கரோனா தொற்று பரவவில்லை. வெளிநாடு, வெளிமாநிலங்களில் இருந்து வருவோர்களால் தான் கரோனா தொற்று வேகமாக பரவுகிறது. தொடக்கத்தில் 14 நாள்கள் கரோனா தொற்று கட்டுக்குள் இருந்த நிலையில், எல்லைகளை திறந்துவிட்டதால் வெளிமாநிலத்தவர்கள் மூலம் கரோனா தொற்று வேகமாக பரவிவிட்டது.
எனவே, புதுவை மாநில எல்லைகள் புதன்கிழமை (ஜூன் 17) முதல் முழுவதுமாக மூடப்படும். சென்னை, விழுப்புரம், கடலூரில் இருந்து புதுச்சேரி வரும் எல்லைகளும், நாகை, மயிலாடுதுறையில் இருந்து காரைக்கால் வரும் எல்லைகளும் மூடப்படும். புதுவைக்குள் வெளிமாநில மக்கள் யாரும் அனுமதிக்கப்படமாட்டார்கள். மருத்துவம், திருமணம், துக்க நிகழ்ச்சிகளுக்காக புதுவைக்குள் இ-பாஸுடன் வருவோர்களும் 15 நாள்கள் தனிமைப்படுத்தப்படுவார்கள்.
புதுவையில் கடைகள் திறக்கும் நேரம் குறித்து புதன்கிழமை கடைக்காரர்களுடன் பேசி மீண்டும் கடைகள் திறக்கும் நேரம் நிர்ணயிக்கப்படும். புதுவையில் கரோனா பரிசோதனைகளை மருத்துவர்கள் அதிகப்படுத்த வேண்டும் என்று உத்தரவிட்டுள்ளோம் என்றார் முதல்வர் நாராயணசாமி.