சென்னை: தமிழகத்தில் கோவை, நீலகிரி, தேனி உள்பட 10 மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பிருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இது குறித்து சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருப்பதாவது, தமிழகத்தில் அடுத்த 48 மணி நேரத்துக்கு தென்மேற்குப் பருவக் காற்று மற்றும் வெப்ப சலனத்தின் காரணமாக கோவை, நீலகிரி, தேனி, தஞ்சாவூர், திருவாரூர், நாகைப்பட்டினம், புதுக்கோட்டை, சிவகங்கை, இராமநாதபுரம் மற்றும் விழுப்புரம் ஆகிய மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக் கூடும்.
சென்னையைப் பொறுத்தவரை மாலை நேரங்களில் வானம் பொதுவாக மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஓரிரு பகுதிகளில் லேசான மழை பெய்யக் கூடும்.
அதிகபட்ச வெப்பநிலை 40 டிகிரி - குறைந்தபட்சம் 29 டிகிரி செல்சியஸ் ஒட்டி இருக்கும்.
கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக சின்னக்கல்லார் - 7 செ.மீ., வால்பாறை - 6 செ.மீ., திண்டிவனம் - 5 செ.மீ. மழை பதிவாகியுள்ளது.