மதுரை மாவட்டம் திருமங்கலம் அனைத்து மகளிர் காவல்நிலைய கணினிப் பிரிவு காவலருக்கு கரோனா தொற்று பாதிக்கப்பட்டுள்ளதால் திருமங்கலம் அனைத்து மகளிர் காவல்நிலையம் மூடப்பட்டுள்ளது.
திருமங்கலம் சோழவந்தான் ரோடு பகுதியைச் சேர்ந்த 40 வயது பெண். இவர் திருமங்கலம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் கணினி பிரிவில் பணியாற்றி வருகிறார். கடந்த 3 நாட்களுக்கு முன்பு காய்ச்சலால் அவதிப்பட்ட அவர் திருமங்கலம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காகச் சென்றார். அங்கு அவருக்கு கரோனா தொற்று பரிசோதனை செய்யப்பட்டது.
மூன்று நாட்கள் விடுமுறையிலிருந்த அவர் வெள்ளிக்கிழமை பணிக்கு வந்தார். இந்நிலையில் அவருக்கு கரோனா தொற்று பாதிப்பு இருந்தது தெரிய வந்தது. இதையடுத்து அவரை சுகாதாரத்துறையினர் மதுரை அரசு மருத்துவமனைக்குச் சிகிச்சைக்கு அனுப்பி வைத்தனர். தொடர்ந்து நகராட்சி சார்பில் அனைத்து மகளிர் காவல் நிலையம் முழுவதும் கிருமி நாசினி தெளிக்கப்பட்டு காவல் நிலையம் மூடப்பட்டது. மேலும் அங்கு பணிபுரிந்த பெண் காவலர்கள் அனைவருக்கும் கரோனா பரிசோதனையும் செய்யப்பட்டது.