மயிலாடுதுறை காவிரி துலாகட்டத்திற்கு மதியம் வந்து சேர்ந்த காவிரி நீரை ஆயிரத்திற்கும் மேற்பட்ட பொதுமக்கள் பட்டாசு வெடித்தும், நவதானியங்கள் வைத்து கும்ப மரியாதையுடன் வரவேற்பு அளித்தனர்.
மேட்டூரில் கடந்த 12ஆம் தேதி திறக்கப்பட்ட காவிரி நீர் மயிலாடுதுறை காவிரிதுலாக் கட்டத்தை வந்தடைந்தது.
கங்கை முதலான புண்ணிய நதிகள் ஐப்பசி மாதம் முழுவதும் துலாகட்டத்தில் புனித நீராடி தங்கள் பாவங்களைப் போக்கிக் கொண்டதாக ஐதீகம். இதையொட்டி மயிலாடுதுறையில் உள்ள அனைத்து சிவாலயங்களில் இருந்து சுவாமி, அம்பாள் துலா கட்டத்தில் எழுந்தருளி ஐப்பசி மாதம் முழுவதும் தீர்த்தவாரி நடைபெறும்.
இத்தகைய சிறப்பு வாய்ந்த காவிரி துலா கட்டத்திற்கு மேட்டூரில் திறந்துவிடப்பட்ட காவிரி நீர் இன்று மதியம் வந்து சேர்ந்தது. பொங்கி வந்த காவிரி அன்னையை வரவேற்கும் விதமாக ஆயிரத்திற்கும் மேற்பட்ட பொதுமக்கள் காவிரியில் இறங்கி பட்டாசு வெடித்தும், நவதானியங்கள் வைத்து பூரணகும்ப மரியாதையுடன் வழிபாடு செய்து உற்சாகத்துடன் தங்கள் மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்.
இதில் கிராமிய நாடக கலைஞர்கள் விநாயகர், முருகன், சிவன், பார்வதி, அகத்தியர், வள்ளுவர் மற்றும் காவிரித்தாய் வேடமணிந்து பங்கேற்றனர். ஏராளமானோர் பொங்கி வரும் காவிரி நீரை செல்போனில் படம் பிடித்தனர்.