முழு ஊரடங்கு காரணமாக மதுரையில் ரூ.1000 உதவித் தொகை வழங்குவது பற்றி முதல்வர் முடிவெடுப்பார் என அமைச்சர் காமராஜ் தெரிவித்துள்ளார்.
இன்று சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய தமிழக உணவுத்துறை அமைச்சர் காமராஜ், சென்னை உள்ளிட்ட 4 மாவட்டங்களில் கரோனா நிவாரண நிதி ரூ.1,000 வழங்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன. சென்னையில் நிவாரண நிதி வீடு வீடாக வழங்கப்பட்டு வருகிறது. 53.33% ரேஷன் அட்டைகளுக்கு ரூ.1,000 நிவாரணத் தொகை வழங்கப்பட்டுள்ளது என்று தெரிவித்தார்.
தொடர்ந்து, மதுரை மாவட்டத்தில் முழு ஊரடங்கு காரணமாக அங்கு கரோனா நிவாரண நிதி வழங்குவது குறித்து முதல்வர் எடப்பாடி பழனிசாமி முடிவெடுப்பார் என்றும் கூறினார்.
மதுரையில் கரோனா பரவல் அதிகரித்துள்ளதால், மதுரை மாவட்டம் முழுவதும் நாளை முதல் ஜூன் 30 வரை முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட உள்ளது.
முன்னதாக, சென்னை உள்ளிட்ட 4 மாவட்டங்களில் ஜூன் 19 முதல் ஜூன் 30 வரை முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.