ஈரோடு மாவட்டம், நெரிஞ்சிப்பேட்டைக்கும், சேலம் மாவட்டம், பூலாம்பட்டிக்கும் இடையே காவிரி ஆற்றில் நடைபெற்று வந்த பயணிகள் படகுப் போக்குவரத்து நிறுத்தப்பட்டுள்ளது.
கரோனா தடுப்பு நடவடிக்கையாக மார்ச் மாதம் 25-ம் தேதி முதல் முழு முடக்கம் அறிவிக்கப்பட்டது இதனால், இரு மாவட்டங்களுக்கும் இடையே நடைபெற்று வந்த படகு போக்குவரத்து நிறுத்தப்பட்டது.
இதனால், பொதுமக்களும் சுமார் 15 கிலோமீட்டர் தூரம் சுற்றிச் சென்று வந்தனர். இந்நிலையில் ஊரடங்கில் தமிழக அரசு தளர்வுகளைத் தொடர்ந்து அறிவித்து வந்ததால், பயணிகள் படகுப் போக்குவரத்து மீண்டும் தொடங்கப்பட்டது. இதனால், பொதுமக்கள் கடந்த ஒரு வார காலமாக படகில் பயணித்து வந்தனர்.
இந்நிலையில், கரோனா தொற்று மீண்டும் பரவ தொடங்கியதைத் தொடர்ந்து தமிழக அரசு மாவட்டங்களுக்கு இடையிலான அனைத்து போக்குவரத்தையும் ரத்து செய்தது. மேலும், முறையாக இ-பாஸ் பெற்ற பின்னரே செல்ல வேண்டும் எனவும் அறிவித்தது.
இதையடுத்து, ஈரோடு மாவட்டத்துக்கும், சேலம் மாவட்டத்துக்கும் இடையே நடைபெற்று வந்த படகு போக்குவரத்து வரும் 30-ம் தேதி வரை ரத்து செய்யப்பட்டது.