சாத்தான்குளத்தில் தந்தை - மகன் மரணம் தொடர்பாக சிபிஐ விசாரணைக்கு உத்தரவிடுவது குறித்து அரசு கொள்கை முடிவு எடுத்தால் அதற்கு நீதிமன்ற அனுமதி தேவையில்லை என்று உயர் நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவு பிறப்பித்துள்ளது.
சாத்தான்குளத்தில் தந்தை - மகன் மரணம் அடைந்தது குறித்து உயர் நீதிமன்ற மதுரைக் கிளை தாமாக முன் வந்து விசாரணைக்கு ஏற்றது.
இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்த போது, சாத்தான்குளத்தில் தந்தை - மகன் மரணம் அடைந்த சம்பவம் தொடர்பாக சிபிஐ விசாரணைக்கு மாற்ற அனுமதி கேட்டு தமிழக அரசு சார்பில் முறையீடு செய்யப்பட்டது.
இதைக் கேட்ட நீதிபதிகள், தந்தை - மகன் மரணம் தொடர்பாக சிபிஐக்கு மாற்றுவதாக இருந்தால் மாற்றுங்கள். அது தமிழக அரசின் கொள்கை முடிவு. அரசின் கொள்கை முடிவுக்கு நீதிமன்ற அனுமதி தேவையில்லை என்று கருத்துத் தெரிவித்துள்ளனர்.
மேலும், தந்தை - மகன் இறப்பு குறித்த விசாரணைக்கு காவல்துறை போதிய ஒத்துழைப்பு வழங்கவில்லை என்று தெரிகிறது. எனவே, தடயவியல் அதிகாரிகள் சாத்தான்குளம் காவல்நிலையத்துக்குச் சென்று ஆவணங்களை சேகரிக்க வேண்டும்.
தந்தை - மகன் மரணத்தில் உரிய நீதி வழங்கப்பட வேண்டும் என்பதற்காகவே, நீதிமன்றம் தாமாக முன் வந்து வழக்கு விசாரணைக்கு ஏற்றது. விசாரணையை நீதிமன்றம் தொடர்ந்து கண்காணிக்கும், ஆவணங்களை சரிபார்க்கும் என்றும் நீதிபதிகள் தெரிவித்துள்ளனர்.