சேலம்: கரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கையால் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டதால், வாழ்வாதாரமின்றி தருமபுரியில் இருந்து பொடி நடையாக சொந்த ஊர் திரும்புவதாக, பெரம்பலூரை சேர்ந்த கழுதை பால் விற்கும் கேசவன் வேதனையுடன் தெரிவித்தார்.
கரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கையாக 21 நாள் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக அனைத்து கடைகளும், பேருந்து, ரயில் போக்குவரத்து அனைத்தும் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. பொதுமக்கள், சமூக இடைவெளியைக் கடைபிடித்து கடைகளில் பொருட்களை வாங்கி சென்றனர். பெரம்பலூரை சேர்ந்த கேசவன், அவரது குடும்பத்தினர் கழுதை பால் விற்று பிழைப்பு நடத்தி வருபவர்கள்.
தருமபுரி வரை கழுதை பால் விற்க சென்றவர்கள், தடை உத்தரவு காரணமாக தற்போது பெரம்பலூர் திரும்பி செல்கின்றனர். 50 மில்லி கழுதைப்பால் ரூ.50-க்கு விற்பனை செய்து பிழைப்பு நடத்தி வரும் கேசவன், ராணி உள்ளிட்ட அவரது குடும்பத்தினர் கைவசம் 6 கழுதைகள் உள்ளன. தடை உத்தரவு காரணமாக குடும்பம் சகிதமாக பெரம்பலூர் நோக்கி நடந்து செல்லும் இந்த குடும்பம் சனிக்கிழமை காலை சேலம் நெடுஞ்சாலையைக் கடந்து சென்றது.
தொடர்ந்து வெயிலில் போதிய உணவு இல்லாமல் பயணித்து களைப்புடன் காணப்பட்ட அவர்கள் கூறியது: தடை உத்தரவால் உணவு கிடைப்பது சிரமமாக உள்ளது. போதிய வாழ்வாதாரம் இல்லாமல் குழந்தைகளோடு சொந்தஊருக்கு திரும்பி செல்கிறோம். வழியில் காவல்துறையினர், தன்னார்வலர்கள் உணவு உள்ளிட்ட உதவிகளை செய்தனர். மூன்று நாள்களாக தொடர்ந்து பயணித்து வருகிறோம்.
சாலையோரங்களில் பயணத்தின் போது கிடைக்கும் உணவுகளை சாப்பிட்டு வருகிறோம். மேலும் சாலையோரங்களில் தெரு நாய்கள் துரத்துவதால் வேதனையுடன் மூன்று நாள்கள் பயணித்து வருகிறோம் என்றனர்.