

மதுரை: கரோனா பரிசோதனைக் கருவிகள், அதிநவீன ஆய்வுக்கூட வசதியுடன் கரோனா ரத்த மாதிரி பரிசோதனைக்கு உதவ முன்வந்துள்ள காமராஜர் பல்கலைக்கழகத்தை, சுகாதாரத்துறை புறக்கணித்திருப்பது பொதுமக்கள் நலனுக்கு அச்சுறுத்தலை ஏற்படுத்தியுள்ளது.
உலகம் முழுவதையும் அச்சுறுத்தலுக்கு ஆளாக்கியுள்ள கரோனா நோய்த்தொற்று 150-க்கும் மேற்பட்ட நாடுகளில் 35,00,812 பேருக்கு பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது. இதில், 2,45,048 நோயாளிகள் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளனர்.
இந்தியாவில் 39,980 பேர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் 1,327 பேர் உயிரிழந்துள்ளனர். தமிழகத்தில் மே 2-ஆம் தேதி நிலவரப்படி 2,757 பேர் பாதிக்கப்பட்டநிலையில் இதுவரை 29 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும், தமிழகத்தில் நாளுக்கு நாள் கரோனா நோயாளிகளின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. கரோனா தொற்றைக் கட்டுப்படுத்த அதிக அளவு பரிசோதனை மூலம் தொற்றாளர்களை கண்டறிதல், தனிமைப்படுத்துதல், சிகிச்சை அளித்தல் ஆகியவற்றை உலக சுகாதார நிறுவனம் பரிந்துரைத்துள்ளது.
கரோனா தொற்றைக் கண்டறிய இரண்டு விதமான பரிசோதனை முறைகள் பயன்படுத்தப்படுகின்றன. இதில், ரேபிட் கிட் என்றழைக்கப்படும் விரைவு பரிசோதனை உபகரணங்கள் மூலம் சோதனை மேற்கொள்வது மற்றும் பிசிஆர் (பாலிமரைஸ் செயின் ரியாக்ஷன்) கருவி மூலம் சோதனைகள் மேற்கொள்ளப்படுகின்றன. இதில், தமிழகத்தில் ரேபிட் கிட் உபகரணங்கள் போதுமான அளவு இல்லாததால், அரசு மருத்துவமனைகளில் உள்ள பிசிஆர் கருவி மூலம் கரோனா பரிசோதனை மேற்கொள்ளப்படுகிறது.
மேலும், பிசிஆர் கருவி மூலம் கரோனா நோய்த்தொற்றைக் கண்டறிய குறைந்தது 6 மணி நேரமாகிறது. தமிழகத்தில் அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் உள்ள பிசிஆர் பயன்பாடுடைய பரிசோதனைக்கூடங்களின் எண்ணிக்கை 40-க்கும் குறைவாகவே உள்ளது.
தென் மாவட்டங்களை பொருத்தவரை, மதுரை, தேனி, திருநெல்வேலி அரசு மருத்துவமனைகளிலும், சிவகங்கை மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் ஓரளவும் பிசிஆர் கருவி மூலம் பரிசோதனை மேற்கொள்ளப்படுகிறது. இதில், மதுரை அரசு மருத்துவமனையில் விருதுநகர், ராமநாதபுரம், திண்டுக்கல் மாவட்டங்களுக்கு முழுமையாகவும், சிவகங்கை மருத்துவக் கல்லூரியில் பரிசோதிக்க முடியாத ரத்த மாதிரிகளும் பரிசோதனை செய்யப்படுகின்றன. இதில், மதுரை அரசு மருத்துவமனையில் நாள் ஒன்றுக்கு 200 ரத்த மாதிரிகள் மட்டுமே பரிசோதிக்கப்படுகின்றன. இதனால், கரோனா தொற்றைக் கண்டறிவது தாமதமாவதோடு நோயாளிகளுக்கு சிகிச்சை அளிப்பது தொற்று பரவாமல் நடவடிக்கை எடுப்பது போன்றவையும் தாமதமாகின்றன.
தற்போதைய சூழலில் பிசிஆர் பரிசோதனைக்கூடங்களின் எண்ணிக்கை அதிகரித்தால் மட்டுமே கரோனா தொற்றைக் கண்டறிவதும், சிகிச்சை அளிப்பதும் எளிதாக இருக்கும் என்று மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர்.
இந்நிலையில், மதுரை காமராஜர் பல்கலைக்கழகத்தில் இயங்கி வரும் உயிரி தொழில்நுட்பவியல் துறை கரோனா ரத்த மாதிரிகளை பரிசோதனை செய்வதற்கும், பிசிஆர் கருவி மூலம் ரத்த மாதிரிகளை பரிசோதனை செய்வது தொடர்பாகவும் மருத்துவர்கள் உள்ளிட்டோருக்கு பயிற்சி அளிக்க முன்வந்தும், பல்கலைக்கழகத்தின் உதவிகள் புறக்கணிக்கப்பட்டிருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
இது தொடர்பாக பல்கலைக்கழக வட்டாரங்கள் கூறும்போது, பல்கலைக்கழகத்தின் உயிரிதொழில்நுட்பவியல் துறையில் பிசிஆர் கருவிகளும், நவீன ஆய்வகமும் உள்ளது. இங்குள்ள ஆய்வகத்தில் மூலக்கூறு உயிரியல் தொழில்நுட்பம் மூலம் கரோனா தொற்றைக் கண்டறிவது எளிது. எனவே, கரோனா தொற்றைக் கண்டறிவதில் ஏற்படும் காலதாமதம் தொற்று பரவலை அதிகரிக்கவே செய்யும். எனவே, வாய்ப்புள்ள ஆய்வுக்கூடங்களை கரோனா பரிசோதனைக்கு பயன்படுத்த சுகாதாரத் துறை உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.