துபையிலிருந்து கணவரின் உடலுடன் சிறப்பு விமானத்தில் சென்னை திரும்பிய மனைவி

வேலை இழந்த தொழிலாளர்கள், சுற்றுலா சென்றவர்கள் எனப் பல இந்தியர்களுடன் உயிரிழந்த கணவரின் உடலுடன் சென்னை திரும்பியுள்ளார் ஒரு பெண்.
மறைந்த கணவருடன் கொல்லம்மாள்
மறைந்த கணவருடன் கொல்லம்மாள்

துபை: வேலை இழந்த தொழிலாளர்கள், சுற்றுலா சென்றவர்கள் எனப் பல இந்தியர்களுடன் சென்னை வந்த சிறப்பு விமானத்தில், உயிரிழந்த கணவரின் உடலை எடுத்துக் கொண்டு, துபையிலிருந்து திரும்பியிருக்கிறார் தமிழகப் பெண்.

துபையில் இருந்து வந்த சிறப்பு விமானம் மூலம், 182 தமிழா்கள் வெள்ளிக்கிழமை நள்ளிரவு 1 மணி அளவில் சென்னை திரும்பினா். இவர்களில் ஒருவராக, நொறுங்கிய இதயத்துடன் சென்னை திரும்பியிருக்கிறார் கொல்லம்மாள் (29). இவருடைய கணவர் குமாரின் (35) உடலும் இதே விமானத்தில் சரக்குப் பகுதியில் வைத்து சென்னை எடுத்துவரப்பட்டது.

துபையில் உள்ள ராஸ் அல் கைம்மாவில் இயங்கி வரும் தனியார் நிறுவனத்தில் தரக் கட்டுப்பாட்டு மூத்த அதிகாரியாகப் பணியாற்றி வந்தவர் குமார். இவர் பணியின்போது ஏப்ரல் 13-ம் தேதி மாரடைப்பு காரணமாக மரணம் அடைந்தார்.

"வழக்கம் போல காலை உணவை சாப்பிட்டுவிட்டு பணிக்குச் சென்றார், காலை 10 மணியிருக்கும், அவர் பணியாற்றும் வளாகத்தில் இருந்து காவலாளி ஓடி வந்து, கணவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருப்பதாகக் கூறினார், அங்கு அவரைப் பார்க்க என்னை அழைத்துச் சென்றார்கள். ஆனால், மருத்துவமனையில் பார்க்க அனுமதிக்கவில்லை. பிறகு அவர் இறந்துவிட்டதாக என்னிடம் கூறினார்கள்" என்று கண்ணீரோடு கூறுகிறார் கொல்லம்மாள்.

"மூன்று ஆண்டுகளுக்கு முன்புதான் எங்களுக்கு திருமணம் ஆனது, இரண்டு ஆண்டுகளுக்கு முன்புதான் நானும் அவருடன் துபை சென்றேன். எனக்கு எல்லாமுமாக இருந்தவர் அவர், அவரது உடலை மீண்டும் வீட்டுக்குக் கொண்டு செல்ல வேண்டும் என்ற ஒன்றுக்காக மட்டுமே இன்னும் நான் உயிரோடு இருக்கிறேன். இதுவரை எங்குமே நான் தனியாகச் சென்றது இல்லை. இன்று வாழ்க்கையிலேயே என்னைத் தனியாகவிட்டு விட்டுச் சென்றுவிட்டார். இதுதான் நான் தனியாகப் பயணிக்கும் முதல் பயணம். யாருக்கும் இதுபோன்ற நிலைமை ஏற்படக் கூடாது" என்று கண்ணீரைத் துடைத்தபடி கூறுகிறார் கொல்லம்மாள்.

இவருடன் 200 தொழிலாளர்கள், 37 கர்ப்பிணிகள், சில குழந்தைகள், 42 மருத்துவ சிகிச்சைக்காக வருவோர் என இரண்டு ஏர் இந்தியா விரைவு விமானம் மூலம் சுமார் 360 பயணிகள் துபையில் இருந்து சென்னை வந்தனர்.

வெளிநாட்டில் பணிபுரியும் தமிழா்கள், தமிழகம் திரும்ப அனுமதி பெறுவதற்கென உருவாக்கப்பட்ட இணையதளத்தில், 50 ஆயிரத்துக்கும் மேற்பட்டோா், தாயகம் திரும்ப விருப்பம் தெரிவித்திருந்தனா். அவா்களில் துபையிலிருந்து முதல்கட்டமாக, வெள்ளிக்கிழமை நள்ளிரவு 2 சிறப்பு விமானங்கள் மூலம், 359 பேர் சென்னைக்கு அழைத்து வரப்பட்டனர்.

முதல் விமானம், சென்னை விமான நிலையத்தில் வெள்ளிக்கிழமை நள்ளிரவு 1 மணி அளவில் தரையிறங்கியது. அதில் 182 போ் வந்திறங்கினா். அவா்கள் அனைவருக்கும் வெப்பமானி மூலமாக உடலின் வெப்பநிலை பரிசோதிக்கப்பட்டது. மேலும் அவா்களது ரத்தம் மற்றும் சளி மாதிரிகள் எடுக்கப்பட்டு கரோனா பரிசோதனைக்கு அனுப்பி வைக்கப்பட்டன. 

புகைப்படம் நன்றி: கல்ஃப் நியூஸ்
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com