தமிழகத்தில் புதிதாக 509 பேருக்கு கரோனா வைரஸ் நோய்த் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.
தமிழகத்தில் கரோனா வைரஸ் நோய்த் தொற்றால் புதிதாக பாதிப்புக்குள்ளானோர் மற்றும் பலியானோர் பற்றிய சமீபத்திய தரவுகளை மாநில சுகாதாரத் துறை வெளியிட்டுள்ளது. இதன்படி, தமிழகத்தில் புதிதாக 509 பேருக்கு கரோனா வைரஸ் நோய்த் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதில் 288 பேர் ஆண்கள், 221 பேர் பெண்கள். இதைத் தொடர்ந்து தமிழகத்தில் மொத்தம் பாதித்தோரின் எண்ணிக்கை 9,227 ஆக உயர்ந்துள்ளது.
தமிழகத்தில் இன்று மேலும் 3 பேர் பலியானதையடுத்து, மொத்தம் பலியானோரின் எண்ணிக்கை 64 ஆக உயர்ந்துள்ளது. அதேசமயம், இன்று மட்டும் 42 பேர் குணமடைந்துள்ளனர். இதுவரை மொத்தம் 2,176 பேர் குணமடைந்துள்ளனர்.
இன்றைய தேதியில் மொத்தம் 6,984 பேர் சிகிச்சையில் உள்ளனர்.
தமிழகத்தில் இன்று மட்டும் மொத்தம் 12,666 பேருக்கு பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது. இதுவரை மொத்தம் 2,68,250 பேருக்கு பரிசோதனை நடத்தப்பட்டுள்ளது.
தமிழகத்தில் இன்று புதிதாக பாதிக்கப்பட்டதில் அதிகபட்சமாக சென்னையில் 380 பேருக்கு தொற்று இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. இதற்கு அடுத்தபடியாக செங்கல்பட்டு மற்றும் திருவள்ளூரில் தலா 25 பேருக்கு தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.